தமது மாலை வேளைகளைக் காற்பந்துத் திடலில் கழிப்பது ஜெயகணேஷ் கிருஷ்ணாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
பிரின்சஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் அவருக்குக் காற்பந்து என்றால் மிகவும் விருப்பம்.
சிறு வயது முதலே குடும்பத்தினர் அனைவரும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவை ஆதரிப்பதைக் கண்டு தமக்கும் விளையாட்டின்மீது ஆர்வம் ஏற்பட்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
தொலைக்காட்சியில் ஆட்டங்களைப் பார்க்கும்போது விளையாட்டாளர்கள் திறமையாகவும் லாவகமாகவும் விளையாடுவது என்னை ஈர்த்தது என்றார் அவர்.
ஆக்ட்டிவ் எஸ்ஜி காற்பந்து முகாம்களில் தொடங்கிய அவரது பயணம், பின்பு பார்சலோனா காற்பந்துப் பள்ளியில் தொடர்ந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பார்சலோனா காற்பந்துப் பள்ளிகள் உலகக் கிண்ணம் போட்டியில் சிங்கப்பூர் குழுவைப் பிரதிநிதித்து ஸ்பெயினிற்குச் சென்ற குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.
போட்டியிலிருந்து திரும்பிய பின்னர், 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் லயன் சிட்டி செய்லர்ஸ் இளையர் குழுவில் விளையாடத் தொடங்கினார்.
சென்ற ஆண்டு தமது குழுவினர் சிலருடன் போர்ச்சுகல் நாட்டின் போர்டோ நகரில் சல்குயிரோஸ் காற்பந்து அணியுடன் 10 நாள்கள் பயிற்சி செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.
“முதல்முறை ஸ்பெயினிற்குச் சென்றபோது சற்று கடினமாக இருந்தது. குளிரான நாடு என்பதால் அந்த வானிலையுடன் ஒத்துப் போக நேரம் எடுத்தது. ஆனால், அதற்குப்பின் போர்ச்சுகலில் விளையாடுவது சுலபமாக இருந்தது,” என்று கிருஷ்ணா கூறினார்.
அவர் தமது பள்ளி காற்பந்து அணியிலும் திறன்பட விளையாடி வருகிறார்.
சென்ற ஆண்டு பள்ளிக் காற்பந்து அணியின் தலைவராகக் குழுவைச் சிறப்பாக வழிநடத்திய அவருக்குத் தேசியப் பள்ளி விளையாட்டுகளுக்கான சிறந்த விளையாட்டுப் பண்பு (Sportsmanship) விருது வழங்கப்பட்டது.
இனிவரும் காலத்தில் கல்வியிலும் காற்பந்திலும் நன்கு கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமென அவர் விருப்பம் கொண்டுள்ளார்.

