விளையாட்டுப் பொருள்களோடு விளையாட விரும்பாத சிறார்களே நிச்சயம் இருக்கமாட்டர்கள்.
ஆனால், அவற்றை உருவாக்கும் திறனும் நம் சிறார்களிடத்தில் பொதிந்துள்ளது அல்லவா?
தொடக்கப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆற்றலையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தியது இவ்வாண்டின் சோனி புத்தாக்க அறிவியல் விருது எனப்படும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய விளையாட்டுப் பொருள் உருவாக்கும் போட்டி.
சிங்கப்பூர் முழுவதும் 85 பள்ளிகளைச் சார்ந்த கிட்டத்தட்ட 5,000 தொடக்கப்பள்ளி மாணவர்களிடமிருந்து 3,300க்கும் மேற்பட்ட பதிவுகளை வரவேற்றது இவ்வாண்டின் போட்டி.
1998லிருந்து ஆண்டுதோறும் சிங்கப்பூர் அறிவியல் நிலையமும் சிங்கப்பூர் சோனி குழுமமும் இணைந்து கல்வி அமைச்சின் துணையோடு இப்போட்டியை ஏற்பாடு செய்து வருகின்றன.
இவ்வாண்டின் வெற்றியாளர்கள், நவம்பர் 7ஆம் தேதி காலை அறிவியல் நிலையம் சிங்கப்பூரில் நடந்த பரிசளிப்பு விழாவில் அறிவிக்கப்பட்டனர்.
32 மாணவர்கள் இரு பிரிவுகளில் - ஜூனியர் விஸ்கிட் (தொடக்கநிலை 1, 2), விஸ்கிட் (தொடக்கநிலை 3 முதல் 6 வரை) - விருதுகள் பெற்றனர்.
தம் பள்ளியில் இப்போட்டியை நடத்தி, இளம் விஞ்ஞானிகளை உருவாக்கிய 37 ஆசிரியர்களும் நீல நாடா, வைர விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
விழாவிற்குக் கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.
“யாருக்குத் தெரியும்? மாணவர்களின் இந்த சிந்தனைகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான புத்தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் அறிவியலில் தாம் புரிந்துகொண்டதைப் பற்றிக் கூறும்போது அவர்களின் கண்களில் ஒரு வெளிச்சம் தெரிந்தது,” எனப் பாராட்டினார் அமைச்சர் கான்.
“சிறுவர்களின் கனவுகளை மெய்ப்பிக்கவும் கற்றலை சுவாரசியமாக்கவும் விரும்புகிறோம்,” என்றார் சோனி எலக்ட்ரானிக்ஸ் (சிங்கப்பூர்) நிர்வாக இயக்குநர் டாக்காகியோ ஃபுஜிதா.
இவ்வாண்டு புதிதாக ‘கேட்டலிஸ்ட்’ (Catalyst) என்ற புதிய விருது அறிமுகமானது. “ஒவ்வொரு யோசனையும் பல புத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது,” என்றார் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் தலைமை நிர்வாகி இணைப் பேராசிரியர் லிம் டிட் மெங். இவ்வாண்டு 24 ‘கேட்டலிஸ்ட்’ விருதுகள் வழங்கப்பட்டன.
அவ்விருதைப் பெற்றவர்களில் ஒருவர், அக்ஷத் கோதண்டபாணி, 9. குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளி (பொங்கோல்) மாணவரான அவர், நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் இயந்திரமனிதரை உருவாக்கினார்.
மாணவர்களின் வெற்றிப் படைப்புகள்
இருவகை ஒளிப் புதிர்களை (Light Maze) உருவாக்கி ‘மெரிட்’ விருதை வென்றனர் கிண்டுல் கிட்ஸ் அனைத்துலகப் பள்ளியில் பயிலும் சகோதரர்கள் ஆரவ், ஆர்னா குப்தா, 10.
‘டிபிஎஸ்’ அனைத்துலகப் பள்ளியின் ஆசினி முருகேசன், 8, மற்றும் க்ரிஷ் ஸ்ரீகாந்த சாரலே, 8, இருவரும் காந்த சக்தியாலான தவளை விளையாட்டுகளை உருவாக்கி ‘மெரிட்’ விருதை வென்றனர்.
காந்த சக்தியால் புதிரை உருவாக்கி பாராட்டு (commendation) விருது வென்றார் டாசொங் தொடக்கப்பள்ளி மாணவர் சஜந்திரன் மித்ரா, 8. அதே விருதை வென்றார் ஜிஐஜி அனைத்துலகப் பள்ளி மாணவர் ஜானதன் வின்ஃப்ரட் பிரவீன், 8.
ஆசிரியர் விருதுகள்
தம் பள்ளியில் இப்போட்டிகளை ஏற்பாடு செய்து, ஈராண்டுகளாக நீல நாடா விருது வென்றிருந்த ஆறு ஆசிரியர்களுக்கு இம்முறை வைர விருது வழங்கப்பட்டது.
அவர்களில் ஒருவரான சீஷான் தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியர் திருமதி கண்மணி, தன் மாணவர்கள் விளையாட்டுப் பொருள்களை உருவாக்கும் முன், அதனை வரைபடம் ஒன்றை வரைந்துப் பார்த்து பின் செயல்படுத்துவார்கள் என்று கூறினார். “உடனே செய்தால் நிறைய தோல்விகளைச் சந்திக்க நேரிடும். திட்டமிட்டால் சரியாக வடிவமைக்கலாம்,” என்றார் அவர்.
மற்றொரு வைர விருதுபெற்றவர் ‘ஒன் வேர்ல்ட்’ அனைத்துலகப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திருவாட்டி காயத்திரி ரத்தினகுமார். இவர் 2006ல் இப்போட்டியில் பங்கேற்றார். “கற்றல் என்பது வகுப்பறையோடு நின்றுவிடக் கூடாது. மாணவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அந்தந்த சூழல்களைக் கையாளும் திறனைப் பெறவேண்டும்,” என்றார் அவர்.

