சோமுவால் குளிரூட்டி இல்லாமல் வீட்டில் இருக்கவே முடியாது. சாப்பிடும்போதும், தூங்கும்போதும் ஏன் வீட்டில் விளையாடும்போதும் கூட குளிரூட்டி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
“சோமு, இப்படி எப்போதும் குளிரூட்டியைப் பயன்படுத்தக் கூடாது, உடம்புக்குக் கெடுதல்,” என்று அவனது பெற்றோர் எவ்வளவோ கண்டித்தும் அவன் கேட்பதாக இல்லை. அதனால், அவனைத் திருத்த விரும்பிய அவனது தந்தை, சோமுவை அவனது தாத்தா வசிக்கும் கிராமத்திற்கு அனுப்ப முடிவு செய்தார்.
பள்ளி விடுமுறை தொடங்கியது. கிராமத்திலிருந்து வந்த தாத்தா, சோமுவை பேருந்தில் அழைத்துக்கொண்டு கிராமத்தை நோக்கிச் சென்றார்.
கிராமத்தை அடைந்ததும் இருவரும் பேருந்திலிருந்து இறங்கினர். தாத்தா நடக்கத் தொடங்கினார். அந்த ஊரில் ஆட்டோ, கார் என எந்த ஒரு வாடகை வாகனமும் இல்லை. முதலில் ஊரைப் பார்க்கும் ஆவலில் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கிய சோமு, சிறிது நேரத்திலேயே சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் திணறினான். அப்போது அவனுக்குத் தன்னுடைய வீடும், அங்கே சில்லென்று காற்று வீசும் குளிரூட்டியும் நினைவுக்கு வந்தது.
நடக்க நடக்க சோமுவிற்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. வெயிலின் தாக்கம் தாங்காமல் அவனது முகம் சிவந்து போனது.
“தாத்தா, எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, என்னால் இனி நடக்கவே முடியாது,” என்று சோமு சோர்வாகக் கூறினான்.
உடனே தாத்தா, “சோமு, சோர்வடையாதே! அதோ பார்... அந்தப் பெரிய மரத்தின் அடியில் நாம் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்,” என்று உற்சாகமாகக் கூறினார்.
இருவரும் மெதுவாக நடந்து அந்தப் பெரிய வேப்பமரத்தின் அடியைச் சென்றடைந்தார்கள். அந்த மரம் அகலமான கிளைகளுடன், அடர்த்தியான பச்சை இலைகளுடன் ஒரு பெரிய குடை போல விரிந்து நின்றது.
தொடர்புடைய செய்திகள்
மரத்தின் அடியில் அமர்ந்த சோமுவிற்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சுற்றியிருந்த கடும் வெப்பம் மறைந்து, மரத்திலிருந்து வீசிய இதமான காற்று அவனது உடலைக் குளிர்வித்தது. அவன் நிம்மதியாக அமர்ந்தான்.
தாத்தா கொடுத்த தண்ணீரைக் குடித்த சோமு, “தாத்தா, இந்த மரத்தின் அடியில் குளிரூட்டி போட்டது போலவே எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது! என்னால் நம்பவே முடியவில்லை,” என்று ஆச்சரியத்துடன் கூறினான். அவன் அந்த மெல்லிய இயற்கை காற்றை கண்களை மூடி ரசித்தான்.
தாத்தா சிரித்துக்கொண்டே, “நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் சோமு. வெயிலில் கஷ்டப்பட்டு நடந்தால்தான் மர நிழலின் குளிர்ச்சி நமக்குத் தெரியும்,” என்றார்.
நமக்கு எளிதாகக் கிடைக்கும் வசதிகளையும், உதவியையும் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கஷ்டம் வரும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும். எல்லாவற்றையும் விட, இயற்கையின் குளிரூட்டிதான் சிறந்தது என்பதைச் சோமு அன்று புரிந்து கொண்டான்.
நீதி: வாழ்க்கையில் துன்பம் வரும்போது சோர்ந்து போகக்கூடாது. அந்த துன்பம்தான் நமக்கு ஏதோ ஒரு நல்ல பாடத்தைக் கற்றுத்தர வந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். சோமுவிற்கு வெயில் அடித்ததால்தான், இயற்கையின் அருமை புரிந்தது!

