காரைக்குடி அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் சிறிய ரக செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
6 மாதக் கடின உழைப்பு காரைக்குடியை அடுத்த அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 13 மாணவர்கள் கொண்ட குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு சுமார் ஆறு மாத காலம் கடுமையாக உழைத்து, ‘விக்கோ சாட்-1’ எனப் பெயரிடப்பட்ட இந்தச் சிறிய ரக செயற்கைக்கோளை இம்மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
25 கி.மீ. உயரம் சென்ற பலூன் செயற்கைக்கோள் இந்தச் செயற்கைக்கோளை ராக்கெட்டுக்குப் பதிலாக பலூன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்ணில் செலுத்த மாணவர்கள் திட்டமிட்டனர்.
அதற்கான ஏவுதல் நிகழ்ச்சி, கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், பூமியிலிருந்து ஏறக்குறைய 25 கிலோமீட்டர் உயரத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.
விவசாயிகளுக்கு எப்படி உதவும்? இந்தச் செயற்கைக்கோளின் முக்கிய நோக்கம் குறித்து ஆய்வுக் குழுவைச் சேர்ந்த மாணவர் விஷ்ணு கூறுகையில், "காற்றில் கலந்துள்ள பயிர்களைத் தாக்கும் பூஞ்சைகளை (Fungi) முன்கூட்டியே கண்டறிய இந்தச் செயற்கைக்கோள் பெரிதும் உதவும்.
இதன் மூலம் காற்றின் தன்மையை முன்கூட்டியே அறிந்து, விவசாயிகள் தங்களது விலைமதிப்பற்ற பயிர்களை நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.
இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பாராட்டு குறைவான வசதிகளைக் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்தியுள்ள இந்த மாபெரும் தொழில்நுட்பச் சாதனை, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சிறப்புக் காணொளி ஒன்றை வெளியிட்டு, மாணவர்களின் இந்த அறிவியல் தேடலையும் சாதனையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

