தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உங்கள் பள்ளிக்கான தீபாவளிச் சுற்றுலாவை இந்த ரயில்களில் தொடங்கலாம்

2 mins read
5949ec9c-30d3-45bb-a3c7-de8cd9764bfc
தீபாவளி கருப்பொருளிலான வண்ணமிகு அலங்காரத்தை ஆடையாக உடுத்தி அழகுபார்த்த ரயில். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

தீபாவளியை முன்னிட்டு, சில ரயில்களிலும் பேருந்துகளிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன!

இது எல்லோரையும் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்லவும், இந்தியப் பண்பாட்டைப் பற்றிப் பலரும் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது.

அலங்காரங்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தீபாவளி கருப்பொருள்: இந்த அலங்காரங்கள் கோலங்கள், மயில்கள், தீபங்கள், மலர்கள் போன்ற தீபாவளிக்குரிய படங்களை அடிப்படையாகக் கொண்டவை.

வண்ணங்கள்: ஊதா, வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களில் இந்த அலங்காரங்கள் பிரகாசிக்கின்றன.

எங்கே பார்க்கலாம்: சில பெருவிரைவு ரயில்கள் (ஆறு ரயில் தடங்களில் உள்ள குறிப்பிட்ட ரயில்கள்).

10 குறிப்பிட்ட பேருந்துகள்: எண் 3, 12, 43, 67, 85, 147, 154, 190, 674, 960 ஆகிய பேருந்துகள்.

கியூஆர் குறியீடுகள்: அலங்காரங்களில் தகவல் துணுக்குகளும் கியூஆர் குறியீடுகளும் உள்ளன. இவற்றை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தீபாவளியைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம். இது மாணவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

சிறப்பு ஓவியம்: லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் ஒரு பெரிய சுவரோவியம் வரையப்பட்டுள்ளது. இது வரைகலைஞர் ஜெயேஷ் சச்தேவும் ‘சன்லவ்’ இல்லத்தைச் சேர்ந்த 60 மூத்தவர்களும் இணைந்து வடிவமைத்தது.

பிற ரயில் நிலையங்கள்: சிராங்கூன், உட்லண்ட்ஸ் சவுத், மரின் பரேட், நியூட்டன் ஆகிய ரயில் நிலையங்களிலும் இந்த அலங்காரங்களைப் பார்க்கலாம்.

இதன் பின்னணி என்ன?: இந்தச் சிறப்பு அலங்காரங்கள் புதன்கிழமை (அக்டோபர் 1) அன்று தொடங்கப்பட்டன.

யாரெல்லாம் இதில் இணைந்தார்கள்?: லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), இந்திய மரபுடைமை நிலையம், நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பொதுப் போக்குவரத்து நடத்துநர்கள் எனப் பலரும் சேர்ந்து இதற்காக உழைத்துள்ளனர்.

சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை இந்த அலங்காரங்களைத் தொடங்கி வைத்து, அவை மிகவும் கண்ணைக் கவரும் வகையில் இருப்பதாகக் கூறினார்.

லிஷா அமைப்பின் தலைவர் ரகுநாத் சிவா, இந்த அலங்காரங்கள் இந்தியப் பண்பாட்டு அம்சங்களைப் பற்றி மற்றவர்களும் அறிந்துகொள்ள உதவும் என்றும் இது தங்கள் அமைப்பின் 25ஆம் ஆண்டு மற்றும் எஸ்ஜி60 கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது என்றும் தெரிவித்தார்.

எப்போதுவரை இந்த அலங்காரங்கள் இருக்கும்?

இந்த அழகான சிறப்பு அலங்காரங்களை நவம்பர் 11ஆம் தேதிவரை நீங்கள் ரயில்களிலும் பேருந்துகளிலும் பார்க்கலாம்.

நீங்கள் இந்த அலங்காரங்களைப் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறீர்களா? எந்த அலங்காரம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பல்லின மக்களும் தீபாவளி தொடர்பான அம்சங்களைத் தெரிந்துகொள்ள  ப் ஏதுவாக இடம்பெற்றுள்ள தகவல் துணுக்குகள்.
பல்லின மக்களும் தீபாவளி தொடர்பான அம்சங்களைத் தெரிந்துகொள்ள ப் ஏதுவாக இடம்பெற்றுள்ள தகவல் துணுக்குகள். - படம்: லாவண்யா வீரராகவன்
குறிப்புச் சொற்கள்