திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் வான்வெளியில் விதிமுறைகளை மீறி ஹெலிகாப்டர் இயக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடலோரக் காவல் படை உயரதிகாரி உட்பட மூவர்மீது அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிபாதுகாப்பு மண்டலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகே ஹெலிகாப்டர் பறக்கவோ ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடவோ அனுமதி கிடையாது.
இந்தச் சூழலில், கடந்த மாதம் சபரிமலைக் கோயிலுக்கு அருகே கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாகப் பறந்து கோயிலைப் புகைப்படம் எடுத்தது.
மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் திசைமாறியதாகக் கூறப்பட்ட விளக்கத்தைக் கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த உயரதிகாரி ஒருவர், ஆகாயத்தில் இருந்தபடியே ஐயப்பனைத் தரிசனம் செய்யத் திட்டமிட்டு, வேண்டுமென்றே ஹெலிகாப்டரை விதிகளுக்குப் புறம்பாகச் அப்பகுதிக்குச் செலுத்தப் பணித்துள்ளார்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, சுய தேவைக்காகப் பொதுச்சொத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ், அந்த உயரதிகாரி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த பணியாளர்கள் மூவர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

