வலது காலில் கடுமையான தொற்று ஏற்பட்ட நோயாளி ஒருவரை, அவசரச் சிகிச்சைப்பிரிவிற்கோ அல்லது சிறப்பு மருத்துவரிடமோ பரிந்துரைக்கத் தவறிய பொதுநல மருத்துவருக்கு 13 மாதங்கள் தற்காலிகப் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த நோயாளி, டாக்டர் லிம் கியோக் லியோங்கிடம் ஐந்து முறை நேரில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
எனினும், உரிய நேரத்தில் அந்த நோயாளியை மருத்துவமனைக்கு அனுப்பாததால், அவரது வலது கால் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அவரால் நடக்க இயலவில்லை.
அந்த நோயாளிக்குக் கால் விரல்களில் திசுகள் அழுகிய நிலையிலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ‘செல்லுலிடிஸ்’ எனப்படும் கடுமையான கிருமித் தொற்று போன்ற பாதிப்புகளும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
மே 15ஆம் தேதி வெளியான தீர்ப்பின் விவரங்களில் டாக்டர் லிம்மின் வயது குறிப்பிடப்படவில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புக்கிட் மேராவில் உள்ள சென்ட்ரல் மெடிக்கல் குழும மருந்தகத்தில் அவர் பணியாற்றியதாகக் கூறப்பட்டது.

