மத்திய கிழக்குப் போரால் அதிகரித்துள்ள எண்ணெய் விலை சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை.
எண்ணெய் விலை உயர்வால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன என்றும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள், சுகாதார அமைச்சின் உரிமம் பெற்றவை. அவசரமான, அவசரமில்லாத மருத்துவப் போக்குவரத்து சேவைகளையும் பராமரிப்பையும் அந்தத் தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.
மருத்துவமனைகளுக்கும் மருத்துவ நிலையங்களுக்கும் மூத்தோரையும் நடமாடுவதற்குச் சிரமம் உள்ளோரையும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் கொண்டுசெல்கின்றன.
சிகிச்சைகளுக்காகவும் பரிசோதனைகளுக்காகவும் மலேசியாவரை சில ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்படுகின்றன.
பிப்ரவரி இறுதியில் மூண்ட போரால் டீசல் விலை 70 காசு அதிகரித்து $4.50ஆனது.
அதை முன்னிட்டு சில தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் சேவைகளின் கட்டணத்தையும் உயர்த்தின. கடந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து லெண்டோர் ஆம்புலன்ஸ் நிறுவனம் அனைத்து முன்பதிவுகளுக்கும் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது.
மற்ற சில தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் எரிபொருள் விலை உயர்வைப் பயனீட்டாளர்மீது சுமத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டன. ஆனால் அதிகரிக்கும் எண்ணெய் விலையால் கூடிய விரைவில் கட்டணங்களை வேறு வழியின்றி உயர்த்த நேரிடும் என்று அவை தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
ஃபர்ஸ்ட் ஆம்புலன்ஸ் நிறுவனம், அதன் ஒட்டுமொத்த செலவினங்கள் பிப்ரவரி இறுதியில் 15லிருந்து 20 விழுக்காடுவரை அதிகரித்ததாகக் கூறியது.
அதையடுத்து ஒவ்வொரு ஆம்புலன்ஸ் முன்பதிவுக்கும் $7லிருந்து $15வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று ஃபர்ஸ்ட் ஆம்புலன்ஸ் சொன்னது.
எண்ணெய் விலையைச் சமாளிக்க அரசாங்கத்தின் ஆதரவு உதவும் என்று நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.
ராயல் ஆம்புலன்ஸ் நிறுவனம் 5 காசிலிருந்து 10 காசுவரை கட்டணத்தை உயர்த்த திட்டமிடுகிறது.

