கூச்சிங்: ஆசியான், போர்னியோ எரிசக்தி கட்டமைப்பு திட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அண்டை நாடுகளுக்குக் கூடுதல் எரிசக்தியை ஏற்றுமதி செய்யச் சரவாக் அரசு திட்டமிட்டுள்ளதாகச் சரவாக் மாநிலப் பயனீட்டு, தொலைத்தொடர்பு அமைச்சர் ஜூலைஹி நாராவி தெரிவித்துள்ளார்.
புருணைக்குக் குறைந்தபட்சம் 30 மெகாவாட் எரிசக்தியை ஏற்றுமதி செய்யச் சரவாக் இலக்கு கொண்டுள்ளதாகவும் இந்தத் திட்டம் தற்போது கலந்தாலோசிக்கும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே வேளையில், கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி சிங்கப்பூரின் எரிசக்திச் சந்தை ஆணையத்திடமிருந்து நிபந்தனையுடனான அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கு ஒரு கிகாவாட் எரிசக்தியை ஏற்றுமதி செய்ய சரவாக் திட்டமிட்டுள்ளதாக அவர் விவரித்தார்.
“சிங்கப்பூர் வழங்கிய இந்த நிபந்தனையுடனான அங்கீகாரமானது, திட்டம் அடுத்த கட்ட மேம்பாட்டுக்கு நகர்வதற்கான தயார்நிலையையும் உறுதிப்படுத்துகிறது என்றார் அமைச்சர்.
திங்கட்கிழமை (மே 18), சரவாக் சட்டமன்றத்தில் அமைச்சர் ஜூலைஹி பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
மலேசியாவிற்கு ஒரு கிகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வது குறித்தும் பேச்சு நடந்து வருவதாக அவர் கூறினார்.

