கோலாலம்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகள் சிங்கப்பூரும் வியட்னாமும் மட்டுமே என, அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா திங்கட்கிழமை (மே 18) வெளியிட்ட தனது 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய மரண தண்டனைப் போக்குகளை வெளிப்படுத்தும் இந்த அறிக்கை, சிங்கப்பூரில் மரண தண்டனைகள் கணிசமாக அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. 2024ல் ஒன்பதாக இருந்த இந்த எண்ணிக்கை, 2025ல் கிட்டத்தட்ட இருமடங்காகி 17ஆக உயர்ந்துள்ளது.
நிறைவேற்றப்பட்ட 17 மரண தண்டனைகளில், 15 போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்டன.
சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஐந்து மலேசியர்களும் அடங்குவர். அவர்களில், 2014ல் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2017ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட பன்னீர் செல்வம் பரந்தாமனும் ஒருவர்.
2025 அக்டோபர் 8ஆம் தேதியன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.
இதற்கு மாறாக, வியட்னாம் மரண தண்டனையின் வரம்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் உட்பட எட்டு குற்றங்களுக்கு அதனை ஒழித்துள்ளது.
மேலும், அந்நாடு தண்டனைக் குறைப்புக்கான வழிகளையும் விரிவுபடுத்தியுள்ளது. இது மரண தண்டனை குறித்த வட்டார மனப்பான்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
இருப்பினும், அண்மைய சட்டத் திருத்தங்களுக்கிடையே வியட்னாம் மரணதண்டனைப் பதிவுகளைத் தொடர்ந்து மறைத்து, இந்தத் தகவலை ஓர் அரசு ரகசியமாகக் கருதுவதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், வியட்னாமில் மொத்தம் 138 மரண தண்டனைகள் விதிக்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளது. அவற்றில் 100 போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக விதிக்கப்பட்டவை. இந்த எண்ணிக்கையில் மூன்று பெண்களும் நான்கு வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்தக் கண்டுபிடிப்புகளை முன்வைத்த ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியாவின் செய்தித் தொடர்பாளர் தியா ஷேஷ்சன் பாலகிருஷ்ணன், இப்பகுதியில் மரண தண்டனையை ஒழிப்பதற்காக மலேசிய அதிகாரிகள் உடனடியாகப் பரிந்துரைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மலேசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் இந்த அறிக்கை காட்டுகிறது. அங்கு, 2025ஆம் ஆண்டில் நீதிமன்றங்கள் 15 புதிய மரண தண்டனைகளை விதித்துள்ளன. இது, 2024ல் வழங்கப்பட்ட 24 தண்டனைகளை விடக் குறிப்பிடத்தக்க அளவு குறைவு மற்றும் 2023ல் பதிவுசெய்யப்பட்ட 38 தண்டனைகளை விடவும் கணிசமாகக் குறைவு.
உலக அளவில், 2025ல் மரண தண்டனை நிறைவேற்றங்களின் எண்ணிக்கை 2,707 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த நான்கு பத்தாண்டுகளில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பதிவுசெய்ததிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கை.
இருப்பினும், சீனா, ஈரான், சவூதி அரேபியா, அமெரிக்கா, வடகொரியா, ஈராக், எகிப்து உள்ளிட்ட 17 நாடுகள் மட்டுமே இந்த மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளன.

