ஜோகூர் பாரு: முன்னாள் அமைச்சர்களான ரஃபிஸி ராம்லி, நிக் நஸ்மி நிக் அஹமது இருவரும் தங்கள் நாடாளுமன்றப் பதவிகளை விட்டு விலகுவதற்கு முன்பே மலேசிய பெர்சாமா கட்சியில் (பெர்சாமா) இணைந்தனர் என்பதற்கு பிகேஆர் கட்சியிடம் ஆதாரம் உள்ளது என டாக்டர் ஃபுஸியா சாலே தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாண்டன் மற்றும் செத்தியாவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 17) பெர்சாமாவில் இணைந்ததைக் காட்டும் தகவல்கள் கட்சியிடம் உள்ளதாக பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் கூறினார்.
“அவர்கள் அறிவித்தபடி, தங்களது நாடாளுமன்றப் பதவிகளை விட்டு விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே பெர்சாமாவில் இணைந்தனர் என்பதற்கு எங்களிடம் ஆதாரமும் நேர முத்திரையும் உள்ளது,” என்று அவர் திங்கட்கிழமையன்று (மே 18) நடைபெற்ற ஒரு பயனீட்டாளர் நலத் திட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஃபிஸி, நிக் நஸ்மி இருவரும் தங்கள் நாடாளுமன்ற இடங்களைக் காலி செய்வதற்காக 10 மில்லியன் ரிங்கிட், பிகேஆர் பிணைப்பத்திரத்திற்கு உட்படுத்தப்படுவார்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலுக்கு முன்பு அனைத்து பிகேஆர் வேட்பாளர்களும் ஒரு ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி, அவர்கள் பிகேஆர் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னரும், ராஜினாமா செய்தாலோ, மற்றொரு கட்சியில் சேர்ந்தாலோ அல்லது சுயேச்சையாகப் போட்டியிட்டாலோ, ஏழு நாள்களுக்குள் 10 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்த வேண்டும்.
திங்கட்கிழமை அன்று தங்கள் நாடாளுமன்ற இடங்களைக் காலி செய்வதாகவும், செவ்வாய்க்கிழமை (மே 19) அன்று பிகேஆர் கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்வதாகவும் அவ்விருவரும் அறிவித்திருந்ததாக ஃபுஸியா கூறினார்.
கட்சியின் அரசியலமைப்பின்படி, மே 18ஆம் தேதி தங்கள் இடங்களைக் காலி செய்வதற்கு முன்பே, மே 17ஆம் தேதி அன்றே அவர்கள் கட்சி தாவிவிட்டனர் என்பதே இதன் பொருள்.
“எங்கள் சட்ட ஆலோசகர்கள் தற்போது இது தொடர்பாக எங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ரஃபிஸி, நிக் நஸ்மி இருவரும் தங்களின் புதிய அரசியல் திசையை அறிவித்த பெட்டாலிங் ஜெயாவில் நடந்த நிகழ்வில் காணப்பட்ட ஐந்து பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெறும் அரசியல் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஃபுசியா கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, 2016, டிசம்பர் 2ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட மலேசிய ஐக்கிய கட்சி என்றும் அழைக்கப்படும் பெர்சாமா கட்சியின் பொறுப்பை ரஃபிஸியும் நிக் நஸ்மியும் ஏற்றனர்.
மேலும், இந்நிகழ்வில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களான வோங் சென் (சுபாங்), முஹம்மது பக்தியார் வான் சிக் (பாலிக் புலாவ்), ரோட்சியா இஸ்மாயில் (அம்பாங்), ஜாஹிர் ஹசன் (வாங்சா மாஜு), லீ சீன் சுங் (பெட்டாலிங் ஜெயா) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

