சிங்கப்பூரில் அனைவரும் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள, ‘ரீட் எஸ்ஜி’ (ReadSG) என்ற புதிய தேசிய வாசிப்பு இயக்கத்தைத் தேசிய நூலக வாரியம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்தத் திட்டத்தின் புரவலராக உள்ளார்.
2024ஆம் ஆண்டு ஆய்வின்படி, 89 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது ஏதேனும் ஒன்றைப் படிக்கின்றனர். ஆனால், 28 விழுக்காட்டு பேர் மட்டுமே புத்தகங்களைப் படிக்கின்றனர்.
தற்போது கைப்பேசியிலும் கணினியிலும் அதிக நேரம் செலவிடுவதால், பலரும் புத்தகங்கள் படிப்பதை மறந்துவிடுகின்றனர்.
உடற்பயிற்சி எப்படி நமது உடலுக்கு வலிமை தருகிறதோ, அதேபோல, புத்தகங்கள் படிப்பது நமது மூளைக்குச் சிறந்த பயிற்சியைத் தருவதுடன் நமது சிந்தனைத் திறனையும் கற்பனையையும் வளர்க்கும் பழக்கத்தை இத்திட்டம் ஊக்குவிக்க முற்படும் என்று வாரியம் தெரிவித்தது.
“சிறார், இளையர்களுக்கான வாசிப்புப் பழக்கங்களை முறையாக நிலைநிறுத்தப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்றது.
தினமும் புத்தகம் படிக்கும் நேரத்தை அரசின் கூட்டுப் பங்களிப்புத் தளத்தில் பதிவு செய்தால் மெய்நிகர் நாணயங்கள் பரிசாகக் கிடைக்கும். அப்படிச் சேர்க்கும் நாணயங்களைப் பணமாகவே மாற்றிக்கொள்ளலாம்.
1,000 நாணயங்களை $1 ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசாங்கம், பல நிறுவனங்களின் உதவியுடன் இந்தத் திட்டம் இன்னும் பெரிய அளவில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இனி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ‘தேசிய வாசிப்பு மாதம்’ எனக் கொண்டாடப்படும்.

