லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் தேக்கா வட்டாரத்தில் தீபாவளி களைகட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளியைக் கோலாகலமாக கொண்டாட தயாராகுங்கள் சிறுவர்களே!
கடந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதியன்று தீபாவளி ஒளியூட்டு சிராங்கூன் சாலை அருகே பெர்ச் சாலை திறந்தவெளியில் நடைபெற்றது. ஒளிசிந்தும் தீபாவளித் தோரணங்கள் லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன.
இந்த ஒளிவெள்ளம் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஒளி வீசும்.
இவ்வாண்டு ஒளியூட்டின் கருப்பொருளான ‘ராதா-கிருஷ்ணா’வை முன்னிட்டு சிராங்கூன் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் மொத்தம் 45 ஒளிச்சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் நான்கு வெள்ளை குதிரைகளுடனான தங்க ரதம் வடிவமைப்பு பெர்ச் சாலையில் பொதுமக்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான தீபாவளிச் சந்தை, ஆடல், பாடல் உள்ளிட்ட மேடை நிகழ்வுகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்புப் போட்டிகள், கோலமிடுதல், பூக்கட்டுதல் ஆகிவற்றுக்கான பயிலரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பொதுமக்கள் இவ்வாண்டு எதிர்பார்க்கலாம்.
இவற்றுடன் புதையல் வேட்டை, பொதுப் போக்குவரத்து இடங்களில் தீபாவளி வண்ண சுவரொட்டிகள், ‘பிக் பஸ்’ சுற்றுலாக்கள், ஆடை அலங்கார நிகழ்ச்சி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதிய முயற்சியாக இவ்வாண்டு ‘தேக்கா ராஜா’ எனும் யானை உருவிலான ஆளுயர பொம்மை அக்டோபர் 14, 28, நவம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் சிராங்கூன் சாலையில் வலம்வர உள்ளது.
முதல் முறையாக லிஷா உருவாக்கியுள்ள இந்த உருவ பொம்மை ‘தடைகளை அகற்றுதல்’ எனும் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் என்று லிஷா செயலவைக் குழு தெரிவித்தது.
மேலும் இவ்வாண்டு புதிதாக ‘தீபாவளி உணவுச் சந்தை’ ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுச் சந்தை நவம்பர் 11ஆம் தேதி வரை கிளைவ் சாலையில் உள்ள போலியில் இடம்பெறும்.
பண்டிகை உணர்வைத் தூண்டும் பல்வேறு உணவு வகைகள் இந்தச் சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்றும் பொதுமக்கள் உணவினை வாங்கி அங்கேயே உண்டு மகிழும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் லிஷா செயலவை தெரிவித்தது.
மேலும் சிறுவர்களும் பெற்றோரும் கலந்துகொள்ளக்கூடிய பல அருமையான நடவடிக்கைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
இந்திய மரபுடைமை நிலையத்தில் வார இறுதி நாள்களில் தீபாவளிப் பயிலரங்குகளும் சிறார்களுக்காகக் காத்திருக்கின்றன!
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கருப்பொருள் (உணவு, ‘ஃபேஷன்’, கலைகள், புராணங்கள்) கொண்டு நடவடிக்கைகள் நடைபெறும்!
சிறார்களுக்கான இலவச நடவடிக்கைகளும் நிலைய நுழைவாயிலின் அருகே நிகழும்!