பறவைப் பாரடைஸ், நைட் சஃபாரி, ரிவர் வொன்டர்ஸ், சிங்கப்பூர் விலங்குகாட்சிசாலை ஆகிய சிங்கப்பூரின் நான்கு வனவிலங்குப் பூங்காக்களில் 2023ஆம் ஆண்டு 128 பல்வேறு இனங்களைச் சேர்ந்த 970 விலங்குகள் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் ஆக அதிகமானது என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அருகி வரும் உயிரினங்களாகச் சிவப்புப் பட்டியலிடப்பட்டுள்ள 29 இனங்களில் புதிய பிறப்புகள் நிகழ்ந்துள்ளன.
சென்ற ஆண்டு சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பிறந்த இரட்டை ஆண் சிவப்பு ரஃப்டு லெமூர்கள் (Red Ruffed Lemurs) உலகில் அருகிவரும் உயிரினங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் ஓர் இனமாகும். இந்த வகை உயிரினங்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் இனப்பெருக்கம் செய்யும் என்பதால், 2023இல் நிகழ்ந்த பிறப்புகள் இந்த இனத்தைப் பாதுகாக்க எடுத்துவரும் முயற்சியில் ஒரு மைல்கல் என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்துள்ளது.
இனக்கலப்பற்ற பச்சை மற்றும் கறுப்பு நச்சுத் தவளைகளயும் (Purebred Green and Black Poison Dart Frogs) ரொட்டி பாம்பு-கழுத்து ஆமைக் குஞ்சையும் (Roti Snake-necked Turtle) விலங்கியல் தோட்டம் சென்ற ஆண்டு முதன்முறையாக வரவேற்றுள்ளது.
சிங்கப்பூரின் பறவைப் பாரடைஸில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த அமெரிக்க பூநாரை (American Flamingo) குஞ்சின் பிறப்பு சிறப்பம்சமாக மண்டாய் வனவிலங்கு குழுமம் கருதுகிறது.