இயல், இசை, நடனம், நாடகம் என்ற நான்கு பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஹொங் கா நார்த் சமூக மன்றத்தில் மேடையேறித் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக (எஸ்ஐடி) இந்திய கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை சிறாருக்கான ‘அக்னிச் சிறகுகள்’ போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
‘தமிழ் மரபு’ என்ற அடிப்படைக் கருப்பொருளை ஒட்டி மாணவர்கள் தனித்தனிப் பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
தனிநபர் அல்லது குழுவாகப் பங்கேற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பெற்றோரும் பார்வையாளர்களும் மாணவர்களை உற்சாகமூட்ட நிகழ்ச்சிக்கு வருகையளித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நற்பணிப் பேரவை, மக்கள் கழகம், ஹொங் கா நார்த் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆதரவளித்தன.
உயர்நிலை, உயர்கல்வி மாணவர்களுக்காகப் பல தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இருப்பினும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக அத்தகைய நிகழ்ச்சிகள் அதிகம் இல்லை என்று உணர்ந்தார் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக (எஸ்ஐடி) இந்திய கலாசார மன்றத்தின் தலைவர் ரஹானா பானு, 22.
“பல தொடக்கப்பள்ளி மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். தங்கள் திறமைகளை வெளிக்காட்ட அவர்களுக்கு ஒரு மேடை தேவைப்படுகிறது,” என்று அந்த நிகழ்ச்சிக்கான காரணத்தைக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹொங் சுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
போட்டிகளின் வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களும் பங்கெடுத்த அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

