‘வைஸ் ஓக்ஸ்’ அனைத்துலகப் பள்ளியின் ‘வேலி பாய்ண்ட்’ வளாகத்தில் அக்டோபர் 11ஆம் தேதியன்று (சனிக்கிழமை) தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
சென்ற வாரம் அப்பர் சிராங்கூன், புக்கிட் தீமா வளாகங்களிலும் அப்பள்ளி தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடத்தியது.
‘வைஸ் ஓக்ஸ்’ பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி பிற மாணவர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிக்குள் நுழைந்ததுமே அழகான, வண்ணமயமான அலங்காரங்கள் கண்ணைப் பறித்தன. அது யார் கைவண்ணம்? ஆசிரியர்களுடையதா? இல்லையே! மாணவர்களே தாமாக அலங்கரித்தனர்.
“இதன்மூலம் மாணவர்கள் குழுவுணர்வையும் வாழ்க்கைத் திறன்களையும் கற்கின்றனர். நேற்று ஒலிவாங்கி உடைந்தது. அப்போது மூன்று மாணவர்கள் தாமாகச் சிந்தித்து நிகழ்ச்சி நேரத்துக்குள் பழுதுபார்த்தனர்,” என்றார் ‘வேலி பாய்ண்ட்’ பள்ளித் தலைவர் பாயல்.
தீபாவளி வருவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் வேளையில் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வைக் கொண்டுவருவது நம் ஒவ்வொருவரின் கைகளில்தான் உள்ளது என்பதை மாணவர்கள் நிரூபித்தனர்.
ரங்கோலி, ஓவியம், நடனம் என விதவிதமான போட்டிகள் நடைபெற்றன. சற்று வித்தியாசமாக, இரு சகோதரர்களோ நண்பர்களோ அதே போல உடையணியும் மாறுவேடப் போட்டியும் இடம்பெற்றது.
பெரும்பாலும் பெண்களே தம்வசமாக்கும் கலையான ரங்கோலியில் ஓர் ஆண்மகன் சிறப்பாகச் செய்து வியப்பூட்டினார். 10 வயது குபேரா ஸ்ரீசாய், ரங்கோலிப் போட்டியில் இரண்டாம் நிலையைப் பிடித்தார். தாயார் வரைய, குபேரா கோலப்பொடியைத் தூவி கோலத்தை நிறைவுபடுத்தினார். தாளில் வரையும் ஓவியப் போட்டியிலும் அவர் இரண்டாம் நிலையைப் பிடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எதிர்காலத்தில் நான் கட்டட வடிவமைப்பாளராக (architect) விரும்புகிறேன். நான் கட்டடங்களையும் நன்றாக வரைவேன். கோலம் வரைவதில் தனிப்பட்ட ஆர்வம் இல்லாவிட்டாலும், எனக்குப் பரிசுக் கோப்பைகள் வாங்கப் பிடிக்கும் என்பதால் கலந்துகொண்டேன்!” என்றார் குபேரா.
ரங்கோலியில் மூன்றாம் நிலையில் வந்த பார்கவி, தானாக ரங்கோலியைச் செய்ததாகக் கூறினார். “என் தாயார் எனக்கு ஓரிரு வாரம் ரங்கோலி செய்யக் கற்பித்தார்,” என்றார் பார்கவி. முதல் நிலையில் வந்த நாவ்மிகா, 9, பல திறன்கள் கொண்டவராக நடனமும் பாடலும் படைத்தார்.
குழு நடனம் போட்டியில் முதல் பரிசையும் மாறுவேடப் போட்டியில் இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்ற நேத்ரா பகவதி, அடுத்த வாரம் குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியில் நடனப் போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றிலும் போட்டியிடவுள்ளார்.
புனார்வி, 6, குச்சிப்புடி நடனமாடினார். நான்கு வயதிலிருந்து நடனம் கற்கும் அவர், பல கோயில்களிலும் நவராத்திரி விழாக்களிலும் நடனமாடியுள்ளார்.
தீபாவளியை விளக்கும் ராமாயணம் நாடகத்தில் சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்தார் ஜோஷ்னிகா, 8.
புத்துணர்ச்சியுடன் ‘நாட்டு நாட்டு’ நடனத்தை ஆடிய ஆருஷ் நடனத்தில் இரண்டாம் பரிசையும், தன் தம்பியுடன் மாறுவேடப் போட்டியில் முதல் பரிசையும் வென்றார்.