பாரிஸ்: காற்பந்துப் போட்டியின்போது தம் மீது தவறுதலாக மோதி கீழே விழச் செய்த ஆட்டக்காரரைக் காலால் எட்டி உதைத்த நடுவரை பிரெஞ்சுக் காற்பந்து சம்மேளனம் இடைநீக்கம் செய்தது. பிஎஸ்ஜி=நான்ட் குழுக்களுக்கு இடையே கடந்த ஞாயிறன்று நடந்த 'லீக் 1' ஆட்டத்தின் இறுதித் தருணத்தில் நான்ட் வீரர் டியேகோ கார்லோஸ் பந்தைத் தடுக்க ஓடியபோது நடுவர் டோனி சேப்ரன் மீது இலேசாக இடித்துவிட்டார். இதனால் நிலைகுலைந்து விழுந்த சேப்ரன், காலால் கார்லோசை உதைத்ததுடன் அவரை மஞ்சள் அட்டை காட்டியும் எச்சரித்தார்.
ஆட்டத்தில் முன்னரே ஒருமுறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டிருந்ததால் கார்லோஸ் சிவப்பு அட்டை பெற்று திடலைவிட்டு வெளியேற நேர்ந்தது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்ப, சேப்ரன் தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனாலும், அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக பிரெஞ்சுக் காற்பந்துச் சங்கம் அறிவித்தது. அத்துடன், கார்லோசுக்குக் காட்டப்பட்ட 2வது மஞ்சள் அட்டை எச்சரிக்கையும் திரும்பப் பெறப்பட்டதால் அவரால் அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியும்.