உலகை இன்னமும் மிரட்டிவரும் கொவிட்-19 கிருமியைப் பொறுத்தவரை சீனா மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நாடு. அந்தக் கிருமி பிறந்து வளர்ந்த இடம் சீனாதான். முதன்முதலாக கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானில்தான் கொரோனா கிருமி தலைகாட்டியது.
அங்கிருந்து உலகம் முழுவதும் பல்கிப் பெருகி அது படுத்திய பாடுகளை, விளைவித்த பாதிப்புகளை, மரணங்களை மறுபடியும் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. தடுப்பூசி, கடுமையான கட்டுப்பாடுகள், உலகளாவிய ஒத்துழைப்பு எல்லாவற்றின் விளைவாக அந்தக் கிருமி கட்டுப்படுத்தப்பட்டு இப்போது ஓரளவிற்கு உலகம் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறது.
இத்தகைய இக்கட்டான ஒரு நேரத்தில் மறுபடியும் சீனாவே பிரச்சினையாகிவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கி இருக்கிறது.
கொரோனா கிருமியை அறவே ஒழிக்க முடியாது; இனிமேல் உலகம் கொரோனாவுடன்தான் வாழ்ந்தாகவேண்டி இருக்கும் என்று நம்பி, அந்த முடிவுக்கு வந்து அதற்கு ஏற்ப நாடுகள் ஆயத்தமாகிவிட்டன.
ஆனால், கொரோனா பிறப்பிடமான சீனாவோ அந்தக் கிருமியை அறவே துடைத்து ஒழிக்க வேண்டும். கொவிட்-19 இல்லாத சூழலை எப்படியும் ஏற்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதையே தன் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
சீன அரசாங்கம் எவ்வளவோ பாடுபட்டும் 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் அந்த நாட்டில் விரும்பிய பலன் கிடைக்கவில்லை. ஆகையால், கிருமியை முற்றிலும் துடைத்து ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையை சீனா கைவிட்டு இப்போது திடீரென்று கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டது.
அத்தகைய ஒரு சூழலை எதிர்பார்த்துக் கொண்டே இருந்த கொரோனா கிருமி, இதுதான் சாக்கு என்று தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. தொற்று தாறுமாறாக பெருகிவிட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் திணறு கின்றன; மரணங்கள் கூடிவிட்டன.
சீன நிலவரம், கடந்த மூன்று ஆண்டுகளாக அனுபவித்தவற்றை மறுடியும் எதிர்நோக்கவேண்டி இருக்குமோ என்று உலகமே மிரளும் அளவுக்குப் பயத்தைக் கிளப்பிவிட்டு உள்ளது.
சீனாவில் என்ன நடக்கிறது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அங்கு கொரோனா காரணமாக மரணம் அடையும் மக்களின் அதிகாரபூர்வமான எண்ணிக்கை உலக அளவுடன் ஒப்பிடு கையில் குறைவாகவேதான் உள்ளது. ஆனால் உண்மையான மரண எண்ணக்கை மிக அதிகமாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.
சீனாவில் கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொருநாளும் ஏறக்குறைய 9,000 பேர் மரணமடையக்கூடும் என்று பிரிட்டனைச் சேர்ந்த சுகாதார அடிப்படையிலான தகவல் நிறுவனம் ‘ஏர்ஃபனிட்டி’ கூறுகிறது.
இது உண்மை என்றால் சீன நிலவரம் படுமோசம் என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.
சீனாவில் கொரோனா கிருமி இப்போது எப்படி பரிணமித்துள்ளது என்பது தெரியவில்லை. கிருமி எந்த அளவுக்குப் பரவி இருக்கிறது என்பதும் புரியவில்லை. இவை மிகவும் கவலை தருகின்றன.
ஆகையால், கொரோனா பற்றிய துல்லியமான விவரங்களைத் தெரிந்துகொள்ள ஏதுவாக உலக சுகாதார நிறுவனம் சீன நாட்டு அறிவியல் அறிஞர்களைச் சந்தித்து இருக்கிறது.
தொற்று பரவல், மருத்து2வமனைகள் நிலவரம், மரணங்கள், தடுப்பூசி ஆகியவை பற்றிய தகவல்களைத் தன்னிடம் பகிர்ந்துகொள்ளும்படி சீன அறிவியல் அறிஞர்களுக்கு ஐநா அமைப்பு அழைப்பு விடுத்து இருக்கிறது.
சீனா தன்னுடைய எல்லைகளை இன்று முதல் திறந்துவிடுவதாக அறிவித்து இருக்கிறது.
சீனாவில் இருந்து வரும் பயணிகள் தங்களுக்குத் தொற்று இல்லை என்பதை மெய்ப்பித்தால்தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று முன்னதாகவே அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துவிட்டன.
இந்த அறிவிப்பு சீனாவுக்குக் கோபமூட்டி இருக்கிறது. சீனாவின் கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கிறது. சீனாவின் இப்போதைய சூழ்நிலையை வைத்துக்கொண்டு யாரும் உள்நோக்கத்துடன் செயல்படக்கூடாது. இல்லாததை இருப்பதாக பெரிதுபடுத்தக்கூடாது. அரசியல் நடத்தக் கூடாது என்று சீனா கடுமையாக எச்சரித்து இருக்கிறது.
ஆனாலும் தானும் இதர நாடுகளும் கைக்கொள்ளும் அணுகுமுறை சரியான ஒன்றுதான் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
மொத்தத்தில் பார்க்கையில், சீன நிலவரம் மீண்டும் மிரட்டலை ஏற்படுத்துவதாக உள்ளது.
இப்போதைய உலகில் ஒவ்வொரு நாடும் மிக அணுக்கமாகத் தொடர்பு கொண்டு இருக்கின்றன.
ஒரு தொற்று தலையெடுக்கிறது என்றால் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது. கொரோனா போன்ற கிருமிகள் எல்லைகளுக்குக் கட்டுப்படாத ஒன்று என்பதை கடந்த மூன்றாண்டு காலமாக உலகம் உணர்ந்து இருக்கிறது.
எல்லா நாடுகளுமே இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சிங்கப்பூரை பொறுத்தவரை சீனாவில் இருந்து வரும் பயணிகளால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது என்றே தெரியவருகிறது.
காரணம் சிங்கப்பூர் மக்கள் தடுப்பூசி சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களிடம் மீள்திறன் அதிகமாக இருக்கிறது. சீனாவில் இருந்து இங்கு அதிக பயணிகள் வரும் பட்சத்தில் தொற்று காரணமாக இலேசாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம்.
சிங்கப்பூர் அரசாங்கம் அனைத்துலக கிருமி பரிணமிப்பிற்கு ஏற்ப தன் அணுகுமுறையை மாற்றி அமைத்துக்கொண்டு இருக்கிறது.
சிங்கப்பூரர்கள் கடந்த மூன்றாண்டுகளில் பல பாடங்களைக் கற்றுகொண்டு இருக்கிறார்கள்.
கிருமி எந்த அளவில் மீண்டும் எப்படி தலைதூக்கினாலும் எந்த அளவுக்கு அது மிரட்டலாக உருவெடுத்தாலும் அதை உடனடியாகச் சமாளித்து வெற்றிபெற ஒரே சமூகமாக விவேகமாக சிங்கப்பூரர்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். இருப்பார்கள் என்பதே நம்பிக்கை.