பொருளியலைப் பொறுத்தவரை, இந்த ஆண்டில் எதையும் கணித்துக் கூற இயலாதபடி நிச்சயமில்லாத ஒரு நிலையே தொடரும்போல் தெரிகிறது. ஒரு பக்கம் சாதகமான நிலவரங்கள், மறுபக்கம் பாதகமான சூழல்கள். எல்லாவற்றையும் எடைபோட்டு சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வரும்போது இப்படித்தான் கருத முடிகிறது.
பணவீக்கம் இறங்கத் தொடங்கி இருக்கிறது; அமெரிக்காவில் வேலைச் சந்தை மீள்திறனுடன் திகழ்கிறது; ஐரோப்பிய ஒன்றியமோ கடும் மந்தத்தில் சிக்காமல் தப்பிவிடக்கூடும் என்று தெரிகிறது;
கொரோனா கிருமியை அறவே இல்லாமல் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்து, பூஜ்ஜிய கொரோனா கொள்கையைக் கடைப்பிடித்துவந்த சீனா, அது முடியாமல் போனதால் அந்தக் கொள்கையைக் கைவிட்டுள்ளது. அதன் விளைவாக அந்த நாட்டின் பொருளியல் வளர்ச்சி சூடுபிடிக்கும் சாத்தியங்கள் தெரிகின்றன;
சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளியல் அரங்க அமைப்பின் கூட்டத்தில் பேசிய அனைத்துலக பண நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கீதா கோபிநாத், இந்த மாதப் பிற்பகுதியில் தனது நிதியம் அதன் பொருளியல் மதிப்பீடுகளை உயர்த்தப்போவதாக கோடிகாட்டி இருக்கிறார். இதை வைத்துப் பார்க்கையில் இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளியல் மேம்படும் என்று எதிர்பார்க்க இடம் உண்டு. இவை எல்லாம் சாதகமான அம்சங்களாக இருக்கின்றன.
மறு பக்கத்தைப் பார்க்கும்போது நிலவரங்கள் வேறு விதமாகத் தென்படுகின்றன.
உலகப் பொருளியல் வாய்ப்புகள் என்ற தனது அறிக்கையை உலக வங்கி இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது. முன்னேறிய நாடுகளில் வளர்ச்சி குறையும் என்றும் அந்த அளவுக்கு இருக்காது என்றாலும் வளரும் நாடுகள், தலையெடுக்கும் நாடுகளின் வளர்ச்சியும் இறங்கும் என்றும் உலக வங்கி தெரிவித்தது.
இது ஒருபுறம் இருக்கட்டும்; நாணயக் கொள்கை தொடர்ந்து இறுக்கும் சூழல்; உக்ரேன் போர்; அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றின் பொருளியல் பலவீனமாக இருந்துவரும் நிலை; உலகின் பல நாடுகள் சுமக்கும் கடுமையான கடன் சுமை எல்லாம் பாதக அம்சங்களாக இருக்கின்றன.
சீனா தன்னுடைய கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதால், தாராள பொருளியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதால் அதன் வளர்ச்சி சூடுபிடிக்கும்.
என்றாலும்கூட, அந்த நாட்டில் தொற்று நிலவரத்தின் போக்கு, அதன் காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்தே அதன் வளர்ச்சி ஏற்ற இறக்கமானதாக இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு.
இவை ஒருபுறம் இருக்க, உள்ளூர் நிலவரங்கள், வட்டார நிலவரங்களைப் பார்க்கையில் பாதகமான அம்சங்கள் பலவும் தென்படுகின்றன.
சிங்கப்பூரின் முக்கியமான ஏற்றுமதிகளில் மின்னணுப் பொருள்கள் குறிப்பிடத்தக்கவை. அவை உட்பட சிங்கப்பூரின் ஏற்றுமதிகள் சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் சுருங்கிவிட்டன.
எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் சென்ற ஆண்டு முழுமைக்குமே வெறும் 3%தான் கூடியது. இந்த அளவு, அதிகாரத்துவ மதிப்பீட்டில் பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த பண்டக வர்த்தகம், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் வளர்ச்சி இந்த ஆண்டில் முறையே பூஜ்ஜியத்திற்குக் கீழே 2% அளவுக்கும் பூஜ்ஜியம் அளவுக்கும் குறைந்து விடும் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கணித்துள்ளது. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித்துறை சுமார் கால்பங்குக்குப் பொறுப்பாக இருக்கிறது. இந்தத் துறை ஏற்கெனவே மந்தத்தில் இருப்பதாக பொருளியல் வல்லுநர்கள் சிலர் கணிக்கிறார்கள்.
சீனா எல்லைகளைத் திறக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டினர் வெளிநாடுகளுக்கு அதிகம் பயணம் செய்வார்கள். அதே வேளையில், அதிகம் பேர் சீனாவுக்கும் சொல்வார்கள்.
இதனால் விமானப் போக்குவரத்து, சுற்றுலாத் துறைகள் சூடுபிடிக்கும். இருந்தாலும், இந்தச் சாதக நிலவரம் படிப்படியாகவே அதிகரிப்பதாகத்தான் இருக்கும். இந்த ஆண்டின் பிற்பாதியில்தான் சாதக அம்சங்கள் தலையெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா நீங்கலாக இதர நாடுகளில் தேவைகள் குறைவாகவே இருக்கக்கூடும். முன்னேறிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் எல்லாவற்றையும் எடைபோட்டுப் பார்க்கையில், இந்தப் பாதகங்கள் எல்லாம், சுற்றுலா, பயணத் துறையில் இடம்பெறக்கூடிய சாதகங்களைவிட அதிகமாகவே இருக்கும் என்று உலக வங்கி எச்சரித்து உள்ளது.
இத்தகைய ஒரு சூழலில், நம்பிக்கை தரக்கூடிய அம்சங்களும் தலைகாட்டி இருக்கின்றன.
நாணயக் கொள்கைகள் இறுக்கப்படுவது முன்னதாகவே முடிவுக்கு வந்துவிடும்; சீனாவில் எதிர்பார்க்கப்பட்டதைவிட வலுவான வளர்ச்சி ஏற்படும்; பெரிய பொருளியல் நாடுகள் மந்தத்தில் இருந்து தப்பிவிடும் என்றெல்லாம் கணிக்கப்பட்டு இருக்கின்றன.
உலக நிலவரங்கள், வட்டார நிலவரங்கள் உள்ளூர் நிலவரங்கள் எல்லாவற்றையும் அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டில் 0.5% முதல் 2.5% வரை வளர்ச்சி இருக்கும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கணித்து உள்ளது.
இப்போதைக்கு இதை மாற்றவேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை. மொத்தமாக பொருளியலைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் இப்போதுவரை நிச்சயமில்லாத ஒரு நிலவரம்தான் கண்ணுக்கும் கணிப்பிற்கும் தென்படுகிறது.
போகப்போக நிலவரங்கள் சாதகமாகத் திரும்பும். பொருளியல் சூடுபிடிக்கும் என்பதே நம்பிக்கையாக இருக்கிறது.
முரசொலி