அந்த ஒன்பது ‘பாய்ஸ்’களும் தங்கள் குழுவைச் சேர்ந்த இன்னும் இரண்டு ‘பாய்ஸ்’களுக்காகக் காத்திருந்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை (மார்ச் 4) பிற்பகலில் போலந்திலிருந்து சுதீஷும் கத்தாரிலிருந்து அனிலும் வந்து தங்களுடன் இணைந்ததும், அவர்கள் அனைவரும் ஒன்றாக, “மஞ்சும்மல் பாய்ஸ் இங்கே இருக்கிறோம்” என்று பெருமிதத்துடன் கூறினர்.
அண்மையில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மலையாளத் திரைப்படம் ரசிகர்களிடம், குறிப்பாகத் தமிழர்களிடம் பெருவரவேற்பு பெற்றுள்ளது.
அப்படத்தின் இறுதிக்காட்சியைவிட, இந்த நண்பர்கள் 11 பேரும் ஒன்றுகூடிய தருணம் மிகுந்த பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தது.
அத்திரைப்படம் இந்த 11 நண்பர்களின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
அப்படம் வெளியான பிறகு நண்பர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிச் சந்தித்தது இதுவே முதன்முறை.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், மஞ்சும்மல் எனும் சிற்றூரைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் கடந்த 2006ஆம் ஆண்டு கோடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
அங்குள்ள ‘குணா’ குகைக்குள் ஓர் ஆழமான பள்ளத்தில் சுபாஷ் என்பவர் விழுந்துவிட, அவரைப் பெரும்போராட்டத்திற்குப்பின் நண்பர்கள் மீட்பதே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் கதை.