கொரோனா ஊரடங்கில் நான்கு நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ளார் இயக்குநர்
ஏ.எல்.விஜய்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கி முடித்துள்ள 'தலைவி' திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக திரையரங்கினில் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் திரையரங்குகளில்தான் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் படக்குழுவினர்.
இந்தப் படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்திலும் ப்ரியாமணி சசிகலா வேடத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 'பாகுபலி' படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், 'தலைவி' திரைப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளையும் முடித்துள்ளார் இயக்குநர் விஜய்.
எப்போதுமே குறைந்த செலவில் திட்டமிட்ட நாட்களில் ஒரு படத்தை இயக்கி முடித்துவிடும் விஜய், இந்த கொரோனா
ஊரடங்கு சமயத்தில் 4 நாயகிகளை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகி, 'ஓடிடி'யில் வெளியாக உள்ளது. எந்த இணையத் தளம் என்று முடிவானதும் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'தலைவி' திரைப்படத்திற்கு முன்பாகவே 'ஓடிடி'யில் இந்த படம் வெளியாகவுள்ளது என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர்.