'மகாநதி', 'பென்குயின்', 'மிஸ் இந்தியா' என கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதேசமயம் 'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் தங்கை வேடத்திலும் நடிக்கிறார்.
"நானாக வாய்ப்புகளைத் தேடிச் செல்வதில்லை. அதேசமயம் எனக்குப் பிடித்தமான கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடிக்கிறேன். ரஜினி போன்ற உச்ச நடிகர்களுடன் எத்தகைய வேடம் கிடைத்தாலும் நடிக்கத் தயார்.
"எனினும் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்ளும்போது நான் இப்போது தேர்வு செய்யும் படங்களும் அவற்றின் கதைகளும் சரியாக இருப்பதாகத் தோன்றுகிறது. 'அண்ணாத்த' படம் எப்போது வரும் என ரசிகர்களைப் போன்றே நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்கிறார் கீர்த்தி.
திடீரென உடல் இளைத்துவிட்டீர்களே? என்பதுதான் இவரை அண்மைக்காலமாக நேரில் சந்திக்கும் அனைவரும் கேட்கும் கேள்வியாக உள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறாராம். வாய்ப்பும் நேரமும் கிடைத்திருப்பதால் வீணடிக்காமல், உடல்நலத்தைப் பேண இவை இரண்டும் உதவுவதாகச் சொல்கிறார்.
மீண்டும் படப்பிடிப்புகள் முழு வீச்சில் தொடங்கிவிட்டால் பழைய பரபரப்பான வாழ்க்கை திரும்பிவிடும் என்பதை கீர்த்தி நன்றாக உணர்ந்துள்ளார். கொரோனாவால் கிடைத்துள்ள ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, சக கலைஞர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வது, உறவினர்களைத் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரிப்பது போன்றவற்றையும் செய்து வருகிறார்.
கீர்த்திக்கு காற்பந்து விளையாட்டு ரொம்பப் பிடிக்கும். பார்சிலோனா அணியில் இருந்த நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகையாம். அண்மையில் அந்த அணியில் இருந்து மெஸ்ஸி விலகியதால் சோகத்தில் உள்ளாராம் கீர்த்தி.
இது சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு என்றும் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளாவது மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனாகவுக்காக களமிறங்க மாட்டார் என்பது வருத்தம் அளிக்கிறது என்றும் தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்சிலோனா எஃப்சி அருங்காட்சியகத்துக்குத் தாம் சென்றிருந்ததை அவர் தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவு ஒன்றையும் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கீர்த்தியின் நண்பர்களில் பெரும்பாலானோர் காற்பந்து விளையாட்டுப் பிரியர்கள். உலகளவில் முக்கியமாகக் கருதப்படும் காற்பந்துத் தொடர்களின் அனைத்து ஆட்டங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவார்களாம்.
"நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாகவே நானும் காற்பந்துப் போட்டிகளைப் பார்க்கத் தொடங்கினேன். அதன் பிறகு அந்த விளையாட்டு எனக்குப் பிடித்தமானதாக மாறியது.
"நான் பார்க்கத் தொடங்கிய நாள் முதல் இதுவரை மெஸ்ஸியின் ரசிகையாகவே இருக்கிறேன்.
"இது இயல்பாக நடந்த விஷயம். எப்போதுமே அமைதி காப்பதும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதும்தான் அவரது வழக்கம். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.