மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் மோகன்ஜி, யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தப் படத்தை உருவாக்கியதாகவும் விளக்கம் அளித்தார்.
இவரது முதல் படமான 'திரௌபதி' சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதனால் இரண்டாவது படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
"கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் சொன்ன கதைதான் படமாகி உள்ளது.
'திரௌபதி' படத்தைப் பார்த்துவிட்டு என் துணிச்சலைப் பாராட்டுவதாகச் சொன்னார்.
அவர் கூறிய கதை திரைப்படமாக எடுக்கப்பட்டால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழகக் கடலோர மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மக்கள் மத்தியில் சில விவகாரங்கள் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என்றும் கூறினார். இதுதான் 'ருத்ர தாண்டவம்' உருவான கதை," என்றார் மோகன் ஜி.
'திரௌபதி' படத்தில் நடித்த வகையில் நாயகன் ரிச்சர்ட் தமக்கு நெருங்கிய நண்பராகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ரிச்சர்ட் போன்ற, இயக்குநருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் நாயகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்றார்.
தமக்காக சம்பளம் வாங்காமல் நடித்ததாகவும் அதற்காக ரிச்சர்டுக்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.