மீண்டும் நடிக்கத் தொடங்கியதும், வடிவேலுவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. எனினும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியான பிறகே புதுப் படங்கள் குறித்து அறிவிக்க உள்ளாராம்.
இந்நிலையில், வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்க விரும்புவதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"வடிவேலு மிகச்சிறந்த நடிகர். அவரை வைத்து காதலும் நகைச்சுவையும் கலந்த படத்தை எடுக்க விரும்புகிறேன்.
"நான் உருவாக்கி உள்ள அந்தக் கதாபாத்திரத்துக்கு வடிவேலுதான் பொருத்தமாக இருப்பார். அவரால் மட்டுமே அதில் சிறப்பாக நடிக்க முடியும்," என்று கௌதம் மேனன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்குப் பூசை போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது. இந்நிகழ்வில் விஜய் சேதுபதி, சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். பல்வேறு பணிகளுக்கு மத்தியில் படப் பூசையில் கலந்து கொண்டதற்காக சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஹன்சிகா. இந்நிலையில், இந்தப் புதிய படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என்று சேதுபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து பரிசீலிப்பதாக சேதுபதி தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக களமிறங்கி உள்ளார் நகுல். அவர் நடிப்பில் 'வாஸ்கோட காமா' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிகுமார், முனீஸ்காந்த், ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், 'வாஸ்கோட காமா' படத்தின் சுவரொட்டியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நகுல்.