இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமது சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'கனா' படத்தைத் தயாரித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
கிராமத்து இளம் பெண், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதிப்பதுதான் இப்படத்தின் கதை. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருந்தார்.
சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், தமிழ்நாடு பிரீமியர் லீக், இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திப் பாராட்டு பெற்றதுடன், இந்திய அணியிலும் இடம்பெற்று சாதித்தார்.
நடராஜன் ஆட்டத்தை சிவகார்த்திகேயன் ஏற்கெனவே பாராட்டி உள்ளார். எனவே, அவரது வாழ்க்கைக் கதையில் சிவா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' படத்தில் அவர் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருந்தார். ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.