'டிஎஸ்பி' படத்துக்காக மீண்டும் காவல்துறை சீருடையை அணிந்துள்ளார் விஜய் சேதுபதி.
இந்தச் சீருடையை அணிந்தால் உடலில் தனக்கு ஓர் மிடுக்கு வந்துவிடுகிறது என்றும் வழக்கத்தைவிட புதிய சக்தி உடலில் பரவிவிட்ட உணர்வு ஏற்படுகிறது என்றும் சொல்கிறார்.
"எந்தப் படமாக இருந்தாலும் எனக்கான கதாபாத்திரத்துக்காக அதிகம் உழைப்பதுதான் என் பொறுப்பு. மேலும், அந்தப் பாத்திரங்களில் மனம் ஒன்றிப்போய், ரசித்து நடிக்கிறேன்.
"நமது படங்களைப் பார்க்க மக்கள் தங்கள் பணத்தைச் செலவிடுகிறார்கள். எனவே நமது படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்ற கவலை எனக்கும் உண்டு. என் மனதுக்குப் பிடித்தமானவற்றை செய்கிறேன் என்றாலும், அதன் மூலம் ரசிகர்களுடன் இணைவதுதான் முக்கியம்," என்கிறார் சேதுபதி.
சிறிதும் பெரிதுமாக இதுவரை ஐம்பது படங்களில் நடித்து முடித்துவிட்டாராம். கணக்கு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார்.
"அன்று முதல் இன்று வரை வெகுஜன சினிமாவில்தான் இருக்கிறேன். அதற்கென்று சில அளவுகோல்கள் உள்ளன. அவற்றுக்கு உள்ளேதான் நானும் உள்ளேன்.
"இந்த வேலையைப் பணத்துக்காக மட்டுமே செய்யவில்லை. யாருக்கோ கட்டுப்பட்டும் செய்யவில்லை. வேறு எந்த வேலையும் இல்லை என்பதற்காகவும் செய்யவில்லை. இது உண்மையிலேயே அருமையான வேலை என நினைப்பதால்தான் செய்கிறேன். படிப்படியாகத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். நான் என்னை திறமை வாய்ந்த நடிகனாக நினைத்துக்கொள்வதில்லை.
"எனது படங்கள் பல வணிக சினிமா அளவுகோல்களில் இருந்து கொஞ்சம்தான் மாறி இருக்கும். நான் அதிலேயே எதையாவது செய்துவிட முடியுமா என முயற்சி செய்கிறேன்," என்கிறார் சேதுபதி.
'டிஎஸ்பி' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவதை தானும் அறிந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், ஏற்கெனவே காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது இப்போது கைகொடுப்பதாகச் சொல்கிறார்.
"இதற்கு முன்பு 'சேதுபதி' படத்தில் கதாநாயகன் காவல்துறை அதிகாரியாக எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. அதேபோல் 'செக்கச் சிவந்த வானம்' பட கதா பாத்திரமான இப்ராகிமுக்கு சமூகத்தில் சிலரைக் களை எடுக்க வேண்டியிருந்தது, அவ்வளவுதான்.
"இந்நிலையில், 'டிஎஸ்பி' நாயகனுக்கு மனதில் ஒருவிதமான பகை படர்ந்திருக்கும். அந்தப் பகையை வெல்ல அதிகாரம் தேவைப்படுகிறது. ஒரு விஷயம் துன்பப்படுத்தினால் அதிலிருந்து விலக முற்படுவோம்.
"வெற்றிமாறன் சாரிடம், அவரது 'பொல்லாதவன்' படத்தின் கதை, அதன் தலைப்பு திரையில் தெரியத் தொடங்கியது முதலே ஆரம்பித்துவிடுகிறது என்றேன். 'அவன் பொல்லாதவன், அவனிடம் உங்கள் விளையாட்டை வைத்துக்கொள்ள வேண்டாம்' என்பதாக கதை நகரும். இந்த 'டிஎஸ்பி' படமும் அப்படிப்பட்டவன்தான்.
"இந்தக் காவல்துறை அதிகாரிக்கு பிரச்சினை என்றால் லட்டு சாப்பிடுவது மாதிரி. அவற்றைக் கண்டு அஞ்சும் ரகமல்ல. மேலும், அதிர்ச்சி அடையாமல் துணிச்சலுடன் செயல்பட்டு அனைத்தையும் சமாளிக்கக் கூடிய அதிகாரி," என்கிறார் விஜய் சேதுபதி.
காவல்துறை சீருடை அணியும்போது அத்துறை அதிகாரிகள் மீது தனி மரியாதை ஏற்படுவதாகக் குறிப்பிடுபவர், இந்தப் படத்தில் தனது பாத்திரம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்.
"இந்தச் சீருடையை அணிந்தாலே தனி மிடுக்கும் துணிச்சலும் வந்துவிடும். அதிகாரத்திற்கு ஒரு திமிர் இருக்கிறது. அது தன்னால் வரும். நீங்கள் சிம்மாசனத்தில் பணிவாக உட்கார முடியாது. மன்னர் வேடம் போட்டால் 'உத்தரவிடுகிறேன்' எனச் சொல்லியாக வேண்டும். எங்கே என்னவாக இருக்கிறீர்களோ, அதற்கேற்றார் போல் மாறிவிடுவீர்கள்.
"இக்கதையில் அதிகாரிக்கு உள்ள அதிகாரத்துடன் சில கற்பனைகளும் சேர்ந்து கொள்கின்றன. எனது பாத்திரம் குறித்து யோசித்தபோது சிவாஜி கணேசன் சாரின் அந்தக் கம்பீரம் நினைவுக்கு வந்தது," என்கிறார் சேதுபதி. தற்போது இசையிலும் கவனம் செலுத்துகிறாராம். இதற்கு முன்பு மிருதங்கம், கிடார், வாய்ப்பாட்டு வகுப்புகளுக்குச் சென்று வந்துள்ளாராம். இசையைக் கேட்டால் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் அணுக முடிகிறது என்கிறார் விஜய் சேதுபதி.