கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி மேலும் ஒரு படம் உருவாகிறது.
‘லப்பர் பந்து’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தில் ஹரீஷ் கல்யாணும் ‘அட்டகத்தி’ தினேஷும் நாயகர்களாக நடிக்கின்றனர். இரு நாயகிகளாக சுவாசிகா விஜய், ‘வதந்தி’ சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பாலசரவணன் ஆகியோரை முக்கியக் கதாபாத்திரங்களில் காண முடியும்.
கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி யதார்த்தமான காட்சிகளுடன் உருவாக்கப்படும் இப்படம், தனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்கிறார் ஹரீஷ் கல்யாண்.
“சசி இயக்கத்தில் நான் நடித்த ‘நூறு கோடி வானவில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. எனவே ‘லப்பர் பந்து’ படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.
“இப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மிகுந்த திறமைசாலி. அவர் கூறிய கதை பிடித்துப்போனதால் தயக்கமின்றி நடிக்கிறேன்,” என்று ஹரீஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’, விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்ஐஆர்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தமிழரசன் பச்சமுத்து.