முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது ‘தூக்குதுரை’. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார் இனியா.
ஏற்கெனவே ‘ட்ரிப்’ என்ற படத்தை இயக்கியுள்ள டென்னிஸ் மஞ்சுநாத், மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக தனது அடுத்த படத்தை இயக்கி உள்ளாராம்.
“பொதுவாக தமிழகத்தில் உள்ள சில கிராமங்களில் சிறு, குறுநில மன்னர்களுடைய வகையறாக்கள் இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தவர்கள் இன்று எந்தவிதமான வசதியும் இல்லாமல், பொது மக்களில் ஒருவராக வலம் வருகிறார்கள். எல்லாரையும் மாமன், மச்சான் என்று குறிப்பிட்டு, எந்தவித பந்தாவும் இன்றி பேசிப் பழகுவதையும் பார்த்திருப்போம்.
“என்னதான் பட்டம், பதவி, வசதி இல்லை என்றாலும் கோவில் திருவிழா, முக்கியமான நிகழ்ச்சிகள் என்று வந்துவிட்டால் போதும், இந்த மன்னன் வகையறாக்களுக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும். அந்தக் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இந்த மரியாதை செலுத்தப்படும்.
“எனவே ‘மன்னர்’ என்ற தலைப்பைத்தான் முதலில் தேர்வு செய்தோம். ஆனால் ‘மாமன்னன்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் உருவாகி வருவதால் அதைக் கைவிட்டோம்.
“முன்பெல்லாம் மன்னர்களை துரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தனக்கான மரியாதையைத் தூக்கும் துரைதான் இந்த ‘தூக்குதுரை’,” என்று விளக்கம் அளிக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.
கதாநாயகி இனியாவுக்கு துணிச்சல் மிகுந்த இளம்பெண் கதாபாத்திரமாம். அதன் தன்மையை நன்கு உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.
‘வாகை சூடவா’ படத்தில் நடித்த இனியாவுக்கு விருதுகளும் பாராட்டுகளும் குறைவின்றிக் கிடைத்தன. சில நல்ல படங்கள் அமைந்தபோதிலும் இன்றுவரை பெரிய வெற்றிப் படத்தில் நடித்ததில்லை என்ற மனக்குறை உள்ளதாகச் சொல்கிறார்.
“இடையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அதனால்தான் தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்க முடிவெடுத்தேன். எனினும் ‘கண்ணான கண்ணே’ என்ற தொடரில் கௌரவ வேடத்தில் நடித்ததோடு, மீண்டும் சின்னத்திரை பக்கம் போகவில்லை.
“அண்மையில் வெளியான ‘விலங்கு’ இணையத் தொடரில் நடிகர் விமலின் மனைவியாக நடித்ததற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்தன. இப்போது இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன்,” என்கிறார் இனியா.
இதற்கிடையே சமூக ஊடகங்களில் வெளியான இவரது கவர்ச்சிப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ‘இனியா கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பிவிட்டார்’ என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை அறவே மறுக்கிறார் இனியா.
“தற்போது நடித்து வரும் ‘தூக்குதுரை’ படத்துக்கு எந்த வகையிலும் கவர்ச்சி தேவைப்படாது. இது முழுக்க நகைச்சுவைப் படம். எனக்கான கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் மனநிறைவுடன் நடிக்கிறேன்.
“இதேபோல் அறிமுக இயக்குநர் அஜய் கிருஷ்ணாவின் ‘காப்பி’ படத்திலும் நான் கவர்ச்சி நாயகியாக நடிக்கவில்லை. ஆனால் ஒருசிலர் தொடர்ந்து கவர்ச்சி நாயகி என எனக்கு முத்திரை குத்தப் பார்க்கிறார்கள்,” என்று ஆதங்கப்படுகிறார் இனியா.
‘தூக்குதுரை’ என்ன மாதிரியான படம்?
“பொதுவாக அடிதடி, காதல் படங்களுக்கான கதைக்களத்தை எளிதில் விவரித்துவிடலாம். வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்களை உருவாக்குவது சவாலான பணி. அதேபோல் நகைச்சுவைப் படங்களை இயக்குவதும் பெரும் சவால் என்பேன். அந்த வகையில், இயக்குநர் டென்னிஸ் கடுமையாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார்,” என்கிறார் இனியா.
‘தூக்குதுரை’ படத்தில் மொட்டைராஜேந்திரன, மகேஷ், பாலசரவணன், சென்றாயன், ‘கும்கி’ அஷ்வின் என பெரிய நடிப்புப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளனர்.
“குடும்பமாகச் சென்று ஒரு கிராமத்து திருவிழாவுக்குச் சென்று திரும்பினால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்,” என்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.