சொந்தப் படம் தயாரித்து கையைச் சுட்டுக்கொண்ட அமலா பால் தோல்வியால் துவண்டுவிடவில்லை. இந்நிலையில் அவரை வைத்து மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது.
அதற்குக் காரணம் அண்மையில் ஒரு செய்தியாளர் அளித்த பேட்டி.
தனுஷும் அமலா பாலும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அமலா பாலுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் நடிகர் ரஜினி தடுத்தார் என்று கூறியுள்ளார் தமிழ்த் திரை யுலகின் மூத்த செய்தியாளரான செய்யாறு பாலு.
தனுஷ் நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரு பாகங்களிலும் அமலா பால் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாகிவிட்டதாகக் கூறப்பட்டது.
ஊடகங்களில் இதுகுறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியான நிலையில், தனுஷின் இல்லற வாழ்வில் பிரச்சினை வெடித்தது.
கருத்து வேறுபாடுகள் காரணமாக தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவைப் பிரிந்தார். இதனால் அவரது மாமனார் ரஜினி கடும் மனவேதனை அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அமலா பாலும் தனுஷும் மீண்டும் நெருங்கிப் பழகுவதாகவும் இதனால் ஐஸ்வர்யா கடும் கோபத்தில் உள்ளதாகவும் ஊடகங்களில் புதுப்புது தகவல்கள் உலா வந்தன.
அப்போது என்ன செய்வது என்று யோசித்த ரஜினிகாந்த், திடீரென அமலா பாலை சந்தித்து கடும் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறியுள்ளார் மூத்த செய்தியாளர் செய்யாறு பாலு.
அது மட்டுமல்ல, அந்தச் சந்திப்புக்குப் பிறகு அமலா பாலுக்கு தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகச் செய்ததும் ரஜினிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழலில், தனது ஐம்பதாவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்கப் போவதும் தனுஷ்தான்.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், படத்தில் மூன்று நாயகிகளாம். துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் ஏற்கெனவே ஒப்பந்தமாகி உள்ளனர். இந்நிலையில், அமலா பாலும் இந்தக் குழுவுடன் இணைந்துள்ளாராம். எனினும் இவருக்கும் தனுஷுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இருக்காது எனக் கூறப்படுகிறது.
இந்நேரம் பார்த்து தனுஷ், அமலா பால், ரஜினி ஆகிய மூவரையும் மையப்படுத்தி வெளிவரும் தகவல்களால் தமிழ்த் திரையுலகின் தலைநகராகக் கருதப்படும் கோடம்பாக்கத்தில் சலசலப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையே, தமிழ்த் திரையுலக செயல்பாடுகள் குறித்து மூத்த செய்தியாளர்கள் பலர் அதிர்ச்்சிகரமான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதாக திரையுலகத்தினர் புகார் எழுப்புகின்றனர்.
குறிப்பாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகைகளின் அந்தரங்கமான, தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார்.
தாம் சொல்வதெல்லாம் பொய்யான தகவல் என்றால் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதேவேளையில் மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணன், பிஸ்மி உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிடும்போது, அவை குறித்து முன்பே தீர விசாரித்து, தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே வெளியிடுவதாகக் கூறுகின்றனர்.