“நான் தாய்மை அடைந்த பின்னரே திருமணம் செய்துகொள்வேன்,” என நடிகை டாப்சி தடாலடியாகக் கூறியுள்ளது திரையுலக வட்டாரத்தை பரபரப்பு அடையச் செய்துள்ளது.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி ஆறு தேசிய விருதுகளை வென்ற படம் ‘ஆடுகளம்’. இப்படத்தின் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.
தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ உட்பட சில படங்களில் நடித்த அவர், பாலிவுட்டில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடித்து, முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
இந்தியில் தற்போது ஷாருக்கானுடன் ‘டுங்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை டாப்சிக்கு 35 வயதாகிவிட்ட போதிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். இவர், அண்மையில் சமூக ஊடகம் வழியாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேள்வி எழுப்ப, “நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் இப்போதைக்கு திருமணம் செய்ய வாய்ப்பில்லை,” எனக் கூறியுள்ளார் டாப்சி.
தாய்மை அடைந்த பின்னர்தான் திருமணம் செய்துகொள்வேன் எனவும் அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டாப்சியின் இந்தப் பதிலில் உள்குத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட்டில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் பிரபலங்களைக் கிண்டலடிக்கும் விதமாகவே டாப்சி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
பாலிவுட் நடிகை ஆலியா பட் திருமணத்துக்கு முன்பு கர்ப்பமானார். அதேபோல் நடிகை இலியானா திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமானார். இவர்களை எல்லாம் விமர்சிக்கும் விதமாகவே டாப்சி கருத்து கூறியுள்ளதாக வலைத்தளவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
டாப்சி தனது மற்றொரு பதிவில், “நான் இப்போது ‘ஏலியன்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன். இதில் ஏலியனாக நடிக்கவில்லை. இப்படம் புதிய, வித்தியாசமான அனுபவமாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
டாப்சி, தமிழில் கடைசியாக 2021ஆம் ஆண்டு வெளியான ‘அனபெல் சேதுபதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.