நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் `ஜெயிலர்’ திரைப்பட முதல் காட்சி ஆகஸ்ட் 10 அன்று காலை 8.30 மணிக்கு கார்னிவல் சினிமாஸ் திரையரங்கில் கோலாகலமாகத் திரையிடப்பட்டது.
“அன்பு சாம்ராஜ்யம்” எனும் ரஜினி ரசிகர் குழுவைச் சேர்ந்தவர்கள் ‘ஜெயிலர்’ படத்தைப் பார்க்க மொத்தம் 115 திரைப்பட நுழைவுச் சீட்டுகளை வாங்கி, ஒன்றிணைந்து செய்த கொண்டாட்டத்தால் திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டது.
பொதுவாக சிங்கப்பூர் திரையரங்குகளில் இதுவரை காணாத வகையில் ரஜினி கட்-அவுட் வைத்து, அதற்கு மாலைகள் அணிவித்து, ‘பாப்பர்ஸ்’ வெடித்துக் கொண்டாடினர்.
ஏறத்தாழ 10 ஆண்டுகளாக இயங்கி வரும் அக்குழுவைச் சேர்ந்த 25 வயதான திரு.கௌஷிக் கார்த்திகேயன் கூறுகையில், “சிங்கப்பூரிலேயே முதன்முதலில் நுழைவுச் சீட்டுகளை வாங்கியது நாங்களாகத்தான் இருப்போம். ‘ஜெயிலர்’ படத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தோம். இன்று அந்த நாள். இதைக் கொண்டாடுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்றார்.
ரஜினியின் தீவிர ரசிகரும் ‘காலா’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகையுமான திருவாட்டி சுகன்யா ராஜா, “தலைவர் திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்ப்பதென்பதே தனி அனுபவம்தான். அவரைத் திரையில் பார்ப்பதே போதும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்,” என்றார்.
ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி பிரபலமடைந்து, ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளன.
தொடர்ந்து இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் சில காட்சிகள் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு அந்த நிகழ்ச்சியின் முழுக் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை உச்சமடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரைச் சேர்த்த 46 வயதான கண்ணன், “இது நிச்சயம் வெற்றிப் படம்தான் என்பதில் சந்தேகமே இல்லை,” என மகிழ்வுடன் தெரிவித்தார்.
தம்பதியரான திரு சந்தோஷ், திருவாட்டி. யாமினி ஆகிய இருவரும் ரஜினி ரசிகர்கள் என்பதால், வேலைகள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு முதல் காட்சியைக் காண வந்ததாகத் தெரிவித்தனர். “இருவரும் ரஜினி ரசிகர்களாக இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,” எனப் பூரிப்புடன் பகிர்ந்துகொண்டனர்.
முதன்முதலாக ஒரு திரைப்படத்தை முதல் நாளில் முதல் காட்சி காண வந்துள்ள உட்லண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த மேனகா(40), பிரியா(40), மூர்த்தி (47) ஆகிய மூவரும் “ரஜினியைத் திரையில் பார்ப்பதே திருவிழாதான். அதுவும் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை முதல் காட்சி பார்ப்பது என்பது சிலிர்ப்பான அனுபவம்,” என்று கூறினர்.
இத்திரைப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், சுனில் என அனைத்து திரைத்துறைகளையும் சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள், சின்னத்திரையில் பிரபலமான நடிகர் மாரிமுத்து, சரவணன், அறந்தாங்கி நிஷா, ‘விக்ரம்’, ‘பாவக் கதைகள்’ மூலம் கவனத்தை ஈர்த்த ஜாஃபர் சாதிக் எனப் பலர் நடித்துள்ளனர்.
தனித்துவமாகத் தெரியும் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் தமிழில் ‘திமிரு’, ‘காளை’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ‘விநாயகன்’.
படம் முழுவதும் ரசிகர்களுக்கு விருந்தாக விறுவிறுப்பான அம்சங்களுக்கும் ‘மாஸ்’ காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை என்பதால், அரங்கத்தில் ஆரவாரமும் கூச்சலும் அதிகமாகவே இருந்தது.
படம் முடிந்து மேலும் நான்கு காட்சிகளுக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறும் ரசிகர்களான சுகன்யா, கௌஷிக், “ரஜினி ரசிகர்களுக்கு நெல்சன் அளித்த பெரும் பரிசு இது. படம் பார்க்காதவர்கள், படம் பற்றிய விமர்சனத்தையோ, வேறு தகவல்களையோ தெரிந்துகொள்ளாமல் போய் பாருங்கள் என்றனர்.
இசையமைப்பாளர் அனிருத் சிறப்பாகப் பின்னணி இசை அமைத்துள்ளதையும் வில்லனாக விநாயகம் மிரட்டியுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினர் ரசிகர்கள்.
மேலும், திரு கண்ணன், “இதே பாணியில் ரஜினி படங்கள் நடித்தால் இன்னும் பல படங்களில் நடித்துக்கொண்டே போகலாம், நாங்கள் கொண்டாடிக்கொண்டே இருப்போம்” எனக் கூறினார்.