நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘படை தலைவன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
யு.அன்பு இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இவர் ஏற்கெனவே ‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இவர் கூறிய கதை பிடித்துப் போனதால், நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சண்முக பாண்டியன்.
இவர் நடித்த ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்கள் வசூலில் பெரிதாக சாதிக்கவில்லை. எனினும், வளர்ந்து வரும் இளம் நடிகர் என்ற அடிப்படையில் விமர்சகர்கள் சண்முக பாண்டியனைப் பாராட்டி உள்ளனர்.
விஜயகாந்த் படங்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருந்தனவோ அவை அனைத்தும் ‘படை தலைவன்’ படத்திலும் இருக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர் அன்பு.
“கதை ஒடிசாவில் நடப்பதுபோல் படமாக்கப்படுகிறது. கதாநாயகனுக்கும் ஒரு யானைக்கும் இடையே பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. அந்த யானையை தனது சகோதரனைப் போல் கருதிப் பழகுகிறார் நாயகன்.
“இந்நிலையில் அந்த யானைக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதை கதாநாயகன் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கிறார் என்ற கோணத்தில் கதை நகரும்,” என்கிறார் அன்பு.
யானைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் படமாக்கி உள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், மிக விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.