‘தனி ஒருவன்’ படத்தின் கதையை நடிகர் பிரபாஸை மனதில் வைத்து தாம் எழுதியதாகக் கூறியுள்ளார் இயக்குநர் மோகன்ராஜா.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தக் கதையை பிரபாஸிடம் கூறியதாகவும் அச்சமயம் காதல் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக அவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் மோகன்ராஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தச் சமயத்தில் பிரபாஸுடன் இணைந்து ஒரு காதல் படத்தை உருவாக்கி இருந்தால் இன்று நான் வேறொரு உயரத்தில் இருந்திருப்பேன். எனினும், காதல் படங்களைவிட காவல்துறை தொடர்பான கதைகளில்தான் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதை புரிந்துகொள்ள அந்தக் காலகட்டம் உதவியது.
“பிரபாஸுக்கு ஏற்ற காதல் கதைகள் இல்லாததால் விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கினேன்,” என்று மோகன்ராஜா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவியை வைத்து இவர் இயக்கிய ‘தனி ஒருவன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார்.