திரிஷா நடிப்பில் இரண்டு படங்கள் இம்மாதம் வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
40 வயதை எட்டிய திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இப்போதும் பருவ மங்கையாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
அதிலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக தோன்றிய திரிஷா, 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நடிகர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்து அவற்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு மணி நேரத்திற்குள் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விருப்பம் செய்துள்ளது பற்றி பலரும் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
‘விடாமுயற்சி’ படம் லைக்கா தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் திரிஷா தவிர மற்றொரு நாயகியாக ரெஜினா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திரிஷா நடிப்பில் இம்மாதம் 6ஆம் தேதி வெளியான ‘த ரோட்’ என்ற படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அது திரிஷாவிற்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.
கடந்த 2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு கதை அமைத்துள்ளார் அருண் வசீகரன்.
சாம் சிஎஸ் இசையமைப்பில், திரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒரு பரபரப்பான திரில்லராக படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண் வசீகரன். திரிஷாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது என ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
மகன் மீது உயிரையே வைத்திருக்கும் இளம் தாயாகத் தொடக்கக் காட்சிகளிலும் கணவனும் மகனும் திடீரென்று இறந்துவிட்டதால் அதிர்ச்சியில் உறைந்துபோகும் காட்சிகளிலும் ஆக்ரோஷமான முதிர்ச்சியான நடிப்பைத் தந்துள்ளார் திரிஷா.
“என் மனதைத் தொட்ட கதைகளில் ‘தி ரோட்’ கதையும் ஒன்று. அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தேன்,” என்றார் திரிஷா.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பு எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும் திரிஷா கலந்துகொள்ளவில்லை.
படத்தின் முன்னோட்டக் காட்சியை அவருடைய டுவிட்டர் தளத்தில் பகிர்ந்ததோடு நிறுத்திக்கொண்டார்.
அதன்பின் படம் வெளியாகும் வரை அதைப் பற்றி கண்டு கொள்ளவேயில்லை.
இந்நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை சற்றும் எதிர்பார்க்காத திரிஷா, படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரத் தொடங்கியுள்ளார்.
இப்படத்தைப் பற்றி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் திரிஷா.
அதில் “படம் வெளியாகும்போது நான் ஊரில் இல்லை. ‘த ரோட்’ படத்திற்கு ரசிகர்களும் விமர்சகர்களும் கொடுக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
இதையே படம் வெளியாவதற்கு முன்பு செய்திருந்தால் அது படத்தின் வெளியீட்டிற்கு பெரிதும் உதவியிருக்கும் என்று கோலிவுட்டினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
‘த ரோட்’ நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து ‘லியோ’வும் தனக்கு நல்ல ஒரு வரவேற்பைத் தரும் என்ற ஆவலில் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் நடிகை திரிஷா.
இந்த ஆண்டில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து படங்கள் வெளியாவதால் இந்த ஆண்டு திரிஷாவிற்கு ஏறுமுகம்தான் என்கிறது கோலிவுட்.