ஒரு காலத்தில் தென்னிந்திய நடிகர், நடிகையர் இந்திப் படங்களில் நடிப்பதை பெருமையாகக் கருதினர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகன், நாயகியாக பெயரெடுத்த கையோடு, ‘பாலிவுட்’டில் அறிமுகமாவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுவர்.
“ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வடஇந்தியக் கலைஞர்கள் தமிழ்ப் படங்களில் நடிப்பதை விரும்புகிறார்கள். தமிழில் நடித்தால் உலகெங்கும் உள்ள திரை ரசிகர்களைச் சென்றடைய முடியும் எனும் நம்பிக்கை அவர்களிடம் அதிகரித்துள்ளது,” என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.
இந்தித் திரையுலகின் உச்ச நடிகரான அமிதாப்பச்சன் தொடங்கி ரன்பீர் கபூர்வரை, காஜோல் முதல் ஜான்வி கபூர் வரை அனைவருமே தமிழில் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் கோலோச்சும் மிகச்சிறந்த நடிகர்கள் தங்களுடைய தாய் மொழியில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் தமிழ்ப் படங்களில் நடிப்பதை பெருமையாகக் கருதுவதாக திரையுலக விவரப் புள்ளிகள் சுட்டுகின்றனர்.
இந்திப் படங்களுக்கு உலகச் சந்தையில் கிடைக்கும் வசூலுக்கு இணையாக தமிழ்ப் படங்களும் வசூல் காண்கின்றன.
“மேலும், தமிழ்ப் படங்களின் தரமும் சிறப்பாக உள்ளன. உலக அளவில் அப்படங் களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கின்றன.
“ஒரு இந்திப் படத்தில் நடித்து முடிக்கும் கால அவகாசத்துக்குள் மூன்று தமிழ்ப் படங்களில் நடித்துவிட இயலும் என்பதையும் இந்தி நடிகர்கள் கணக்கிடுகின்றனர்.
“மேலும், காதல், வாழ்வியல், குடும்பம், சமூகம் என பல தளங்களில் உருவாகும் கதைகள் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமில்லாமல் சமூக மாற்றத்துக்கும் வகை செய்கின்றன. அதனால் வடஇந்திய ரசிகர்கள் மத்தியில் தமிழ்ப் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதை இந்திக் கலைஞர்கள் கவனிக்கின்றனர்,” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அமிதாப்பச்சன் ரஜினியின் 170ஆவது படத்தில் நடிக்கிறார். விஜய்யின் `லியோ’ படத்தில் நடித்த சஞ்சய் தத் இப்போது, அஜித்தின் `விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார்.
இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானாபடேகர் பல ஆண்டுகளுக்கு முன் `பொம்மலாட்டம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர், ரஜினியின் `காலா’ படத்திலும் வில்லனாக மிரட்டினார்.
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அக்ஷய்குமார், `2.0’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்ததுடன், தமிழ், இந்தியில் வெளியான `கலாட்டா கல்யாணம்’ படத்திலும் தனுஷுடன் கூட்டணி அமைத்தார்.
ஐஸ்வர்யாராய் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத், `தலைவி’, `சந்திரமுகி 2’ படங்களில் நடித்துள்ள நிலையில், இந்தி நடிகை திஷா பதானி, `கங்குவா’ படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.
ரஜினியின் `காலா’, அஜித்குமாருடன் `வலிமை’ படங்களில் நடித்த ஹுமா குரேஷி ‘விடாமுயற்சி’யிலும் அவருடன் நடிப்பதாகத் தகவல்.
ஜாக்கி ஷெராப், சாயாஜி ஷிண்டே, அதுல் குல்கர்னி, மனோஜ் பாஜ்பாய், யோக்ஜேப்பி, தபு, கஜோல், ஷில்பா ஷெட்டி, மல்லிகா ஷெராவத் என தமிழில் நடிக்க விரும்பும் இந்திக் கலைஞர்களின் பட்டியல் நீளமாக உள்ளது.