தமிழகத்தின் வாச்சாத்தி பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தை இயக்குகிறார் நடிகை ரோகிணி.
கடந்த 1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி பகுதியில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வனத்துறையும் காவல்துறையும் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வன்முறை வெடித்தது.
அப்போது 13 வயதுச் சிறுமி உட்பட, 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர்.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாச்சாத்தி சம்பவம் திரைப்படமாகிறது. இதை நடிகை ரோகிணி இயக்க உள்ளார் என்றும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதுகிறார் என்றும் தெரியவந்துள்ளது.
‘ஜெய்பீம்’ புகழ் லிஜோ மோல் ஜோஸ் நாயகியாக நடிக்க உள்ளார்.
கணவரும் நடிகருமான ரகுவரனின் மறைவுக்குப் பிறகு சமூக செயல்பாட்டாளராக மாறியுள்ளார் ரோகிணி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், ஏற்கெனவே பல ஆவணப்படங்களை இயக்கி உள்ளார்.