ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 10ஆம் தேதி திரைகாண உள்ளது.
இது கார்த்தி நடிப்பில் வெளியாகும் 25வது படம். இதன் இசை, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதுவரை கார்த்தியை வைத்து படம் இயக்கியுள்ள ‘சிறுத்தை’ சிவா, பா.இரஞ்சித், முத்தையா, லோகேஷ் கனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கார்த்திக்கையும் ‘ஜப்பான்’ படம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தனர்.
திரையுலகில் கார்த்தியுடன் நெருங்கிப் பழகும் ஆர்யா, விஷால் ஆகியோருடன் நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. நட்புக்காக தமன்னாவும் பங்கேற்றது கூடியிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
‘மெட்ராஸ்’ கதையை எழுதி முடித்ததும் அதை கார்த்தியிடம் சொல்ல பல்வேறு வகையிலும் முயற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார் இயக்குநர் பா. ரஞ்சித்.
கதையைக் கேட்டதுமே அதில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுதான் அந்தக் கதையை கார்த்தி சாருக்குப் படிக்கக் கொடுக்கலாம் என்றார். கார்த்தியும் நடிக்கத் தயார் என்றதும், ‘நான் ஒரு தலித் சினிமா எடுக்கப் போறேன், அதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்’ என அனைவரிடமும் கூறி எடுத்ததுதான் ‘மெட்ராஸ்’ திரைப்படம்,” என்றார் பா.ரஞ்சித்.
அடுத்து பேசிய கார்த்தி, ‘சமூகநீதி’ என்ற வார்த்தையை ரஞ்சித்தான் தமக்கு அறிமுகப்படுத்திய தாகக் குறிப்பிட்டார்.
“வடசென்னை’ இளையர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் உள்ளது. அதற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என்ற சந்தேகம் இருந்தது. இது குறித்து ரஞ்சித்திடம் கேட்டபோது, ‘இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் இதெல்லாம் மாறும்’ என்றார். அதன் பிறகு நம்பிக்கையுடன் நடித்தேன்,” என்றார் கார்த்தி.
கார்த்தி எப்போதுமே சினிமா குறித்துதான் அதிகம் பேசுவார் என்று லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டார்.
“கைதி’ திரைப்படத்தை நினைக்கும் போது அதில் இடம்பெற்ற அடிதடிக் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். கார்த்தி திரையுலகம் குறித்துதான் ஆர்வத்துடன் விவாதிப்பார். அவர் சினிமாவை ஆழமாக நேசிக்கிறார். சினிமாவைக் கடந்து நடிகர் கவுண்டமணி பற்றித்தான் அதிகமாகப் பேசுவார்,” என்றார் லோகேஷ்.
அடுத்துப் பேசிய இயக்குநர், ‘சிறுத்தை’ சிவா, தன் பெற்றோர் வைத்த பெயர் பிரபலமடைய ‘சிறுத்தை’ படம்தான் காரணம் என்று குறிப்பிட்டார்.
“என் பெயருக்கு முன்னால் ‘சிறுத்தை’ என்பதை சேர்த்துக்கொள்ள கார்த்திதான் காரணம். செய்யும் வேலைக்காக உன்னதமான உழைப்பை வழங்கக்கூடிய நல்ல மனிதர். என்னை முழுமையாக நம்பி ‘சிறுத்தை’ பட வாய்ப்பைக் கொடுத்தார். அந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்திருந்தார்,” என்றார் ‘சிறுத்தை’ சிவா.
இதையடுத்து ‘ஜப்பான்’ படம் குறித்துப் பேசினார் இயக்குநர் ஹெச். வினோத்.
“ராஜூ முருகனின் அரசியல், சமூகப் பார்வைகளை அவரின் முந்தைய படங்களில் பார்த்திருப்போம். ஆனால், இயல்பில் அவர் ரொம்ப ஜாலியான நபர். அந்த உண்மையான ராஜூ முருகனை ‘ஜப்பான்’ படத்தின் மூலம் பார்க்கலாம். படம் மிக சுவாரசியமாக இருக்கும்,” என்றார் ஹெச்.வினோத்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், கார்த்தியுடன் முன்பே இணைந்து ஒரு படத்தை இயக்க இருந்ததாகக் குறிப்பிட்டார்.
“ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அப்போது இணைய முடியவில்லை. இப்போது ஒரு நடிகனாக ‘ஜப்பான்’ படத்தில் இணைந்துள்ளேன். அதில் மகிழ்ச்சி,” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.