ஷ்ருதி ஹாசன் ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசியிருக்கிறார்.
எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் ‘தி ஐ’ எனும் படத்தின் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் கதையின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.
இந்தப் படம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் பேசுகையில், “இந்த ஹாலிவுட் திரைப்படம் உளவியல் கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. இக்கதைப்படி நான் ஒரு விதவைப் பெண், எனது கணவரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய சாம்பலைக் கரைப்பதற்காகக் கிரேக்கத் தீவு ஒன்றுக்குப் பயணிக்கிறேன். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும் சம்பவங்களும்தான் படத்தின் கதை.
“இந்தப் படம் பெண்களின் பார்வையில் ஒரு வன்முறை எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும் என்பதைப் பேசும். நான் சூனியக்காரி என்று அழைக்கப்படுவதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சூனியக்காரி என்ற வார்த்தையால் அழைக்கப்படுவதை எனக்கு கிடைத்த பாராட்டாகவே பார்க்கிறேன்,” என்று ‘தி ஐ’ படத்தைப் பற்றி பேசினார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் சுவரொட்டியை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன், “இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். டாப்னி ஸமான் இயக்கும் இந்தப் படம் கிரேக்க அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டன் சுயாதீன திரைப்பட விழாவிலும் சிறந்த படத்திற்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். ‘தி ஐ’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழில் ஷ்ருதி ஹாசனுக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக அவர் ‘வால்டர் வீரய்யா’, ‘வீரசிம்ஹா ரெட்டி’ படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘சலார்’ படத்தில் நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கிறார். படம் முதலில் செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இறுதிக் கட்ட வேலைகள் முடியாததால் டிசம்பர் 22ஆம் தேதி ‘டன்கி’ படத்துக்கு போட்டியாக களமிறங்குகிறது.
‘சலார்’ படம் பற்றி ஷ்ருதி ஹாசன் பேசுகையில், “பிரசாந்த் நீலும், பிரபாஸும் கதை சொல்வதில் ஒரு மரபை வைத்திருக்கிறார்கள். இந்தப் படம் பிரபாஸுக்காக உருவாக்கப்பட்டது. காரணம் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மூன்று படங்கள் வெற்றி பெறாததால் இந்தப் படத்தின் மூலம் விட்ட இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று கண்ணும் கருத்துமாக பிரபாஸும் இயக்குநரும் கவனத்துடன் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தக் கதையில் பிரபாஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும். பிருத்விராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அதுவும் என்னுடைய படம்தான்.
‘சலார்’ படக்குழுவினரைப்போல நான் இதுவரை பார்த்ததில்லை. பிரபாஸ் உள்ளிட்ட அனைவருமே என்னை சுதந்திரமாக இருந்துகொண்டு படப்பிடிப்பை அனுபவிக்க வைத்தனர்.
‘சலார்’ திரைப்படம் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்திருக்கும் ‘டன்கி’ படத்துடன் களமிறங்குவதைப் பற்றி கவலை இல்லை. ஏனெனில் எங்கள் படம் மீது எங்களுக்கு அக்கறையும், நம்பிக்கையும் இருக்கிறது,” என்று கூறினார் ஷ்ருதிஹாசன்.