திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் தொய்வு இருப்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடைபெற்ற ‘ஜப்பான்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ‘லியோ’ திரைப்படத்தின் வசூல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்தோம். படத்தின் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது வேலை அதோடு முடிந்தது. திரைப்படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதைப் பற்றி தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும்,” என்று வெளிப்படையாகப் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.