விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இறுகப்பற்று’ திரைப்படம் கடந்த 25 நாள்களாக தமிழகத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு்ககிறது. இதையடுத்து ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், அக்டோபர் 6ஆம் தேதி வெளியீடு கண்டது.
அச்சமயம் ஒன்பது படங்கள் திரைகண்ட போதிலும் ‘இறுகப்பற்று’ படம் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
நான்கு வாரங்களைக் கடந்துவிட்ட பிறகும் இந்தப் படம் திரையரங்குகளில் திரையிடப்படுவது அளவில்லா மகிழ்ச்சியை அளித்திருப்பதாகச் சொல்கிறார் விக்ரம் பிரபு.
“இதுபோன்ற படங்கள் அரிதாகத்தான் உருவாகும். இந்தப் படைப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த குழுவில் நானும் பங்களித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி,” என்று விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
விஜய் நடித்த ‘லியோ’ படம் வெளிவந்த நிலையிலும் ‘இறுகப்பற்று’ திரையரங்குகளில் தாக்குப்பிடித்து நிற்பது திரையுலகத்தினருக்கும் வியப்பளித்துள்ளது.
“நல்ல படைப்புகளுக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். இதை தமிழ் ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்,” என்று திரையுலக விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.