‘லியோ’ வெற்றிவிழாவில் விஜய்யிடம் ‘முதல்வன்’ பட பாணியில் கேள்வி கேட்டார் நடிகர் அர்ஜூன்.
அர்ஜூன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘முதல்வன்’. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன் ரகுவரனிடம் கேள்வி கேட்கும் காட்சிகள் மிகவும் பிரபலம்.
அதுபோல் ‘லியோ’ வெற்றி விழாவில் அர்ஜூன் விஜய்யிடம் “விஜய்யாக இருப்பது கஷ்டமா? எளிதா?” என்று கேட்டார். அதற்கு விஜய், “வெளியே இருந்து பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் தெரியும். என்னுடன் என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய்யாக இருப்பது எளிது,” என்றார்.
இயக்குனர் மிஷ்கின் வெற்றி விழாவில் பேசும்போது, “எனக்கு இரண்டு லெஜண்டுகளைத் தெரியும் அவர்களில் ஒருவர் மைக்கேல் ஜாக்சன். மற்றொருவர் புருஸ்லீ. நான் நேரில் கண்ட முதல் லெஜண்ட் விஜய்.
“அவர் சினிமாவிலும் ஹீரோ, நிஜத்திலும் ஹீரோ. ஒவ்வோரு துளியிலும் அவரது உழைப்பு இருக்கிறது. ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்,” என்று தெரிவித்தார்.
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி, “விஜய் சார் மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்,” எனக் கேட்டார். அதற்கு ஒரே வார்த்தையில், “தம்பி விஜய்க்காக என் நெஞ்சையே அறுத்துக் கொடுப்பேன்,” என அதிரடியாகக் கூறி ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிர வைத்தார் இயக்குநர் மிஷ்கின்.
‘லியோ’ வெற்றி விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் லோகேஷ், “இங்கே பேசுவதற்காக நான் எதையும் தயார்செய்துவிட்டு வரவில்லை. நன்றி சொல்ல மட்டுமே வந்தேன். விஜய் அண்ணா, லலித் சார், ஜெகதீஷ் சார், பத்திரிகையாளர்கள், லியோ படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. விஜய் அண்ணா கண்ணைக் காட்டினால் ‘லியோ 2’ படத்திற்கு நான் தயார்,” என்று கூறி அவருக்கும் விஜய்க்கும் இடையே பூசல் என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
திரிஷா பேசுகையில், “லோகேஷ் கனகராஜ் படங்களில் நாயகிகள் இறந்துவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் என்னை கொலை செய்யவில்லை. அதற்கு லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி. ‘லியோ’ படத்தில் ‘அப்படி போடு’ பாட்டு மாதிரி ஒரு பாட்டு கேட்டேன். ஆனால் அவர் வைக்கவில்லை.
“20 ஆண்டுகளாக விஜய்யை எனக்கு தெரியும். எப்படி பார்த்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறார். அதுதான் அவருடைய சிறப்பு. இன்னும் விஜய் எனக்கு காரப்பொரி வாங்கித் தரவில்லை. அதனால், அவரோடு இன்னொரு படம் பண்ணலாமா?” என்ற கேள்வியுடன் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஆசை என்பதை மறைமுகமாகக் கூறிவிட்டு அமர்ந்தார்.