நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த போலி ஆபாசக் காணொளி வெளியான விவகாரத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி நடைபெறுவதாக டெல்லி இணையத்தள குற்றப்பிரிவு காவலர்கள் கூறியுள்ளனர்.
‘ஏ1’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி படங்கள் மற்றும் காணொளிகளுக்கு ‘டீப் ஃபேக்ஸ்’ என்று பெயர். இதன்மூலம் ஒரு புகைப்படத்திலோ அல்லது காணொளியிலோ இருக்கும் ஒருவரது முகத்தை அவரின் விருப்பம் இல்லாமலேயே மற்றொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும்.
இந்தத் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி உருவாக்கப்பட்ட பிரபலங்களின் போலியான காணொளிகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. அதில் அவர் ஆபாசமாக உடை அணிந்ததுபோல இடம்பெற்றிருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதுதொடர்பாக டெல்லி காவலர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் கடிதத்தின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி நடைபெறுவதாகவும் டெல்லி இணையத்தள குற்றக்காவல் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.