மனைவி சில்வியாவின் அன்புதான் இன்று வரை வெற்றியை நோக்கி தம்மை ஓடவைப்பதாகச் சொல்கிறார் நடன இயக்குநர் சாண்டி.
பிரபுதேவா தமக்கு முன்மாதிரி என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘லியோ’ திரைப்படத்தில் ‘சாக்லேட் காபி... சாக்லேட் காபி....’ மூலம் மேலும் பிரபலமாகி உள்ள சாண்டி, கடின உழைப்பும் விடாமுயற்சியுமே வாழ்க்கையில் ஒருவரை முன்னேற்றும் என இளையர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
“நடன இயக்குநர் கலா மாஸ்டரின் குழுவுடன் இணைந்து நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் நீண்ட நாள்களாக அவரிடம் நடனப் பயிற்சி மேற்கொண்டேன். சில தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். பின்னர் அவரது சகோதரி பிருந்தா மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக வேலை செய்தேன்.
“2014ஆம் ஆண்டு ‘ஆ’ என்ற திரைப்படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானேன். அதன் பிறகு 50 படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன்,” என்கிறார் சாண்டி.
‘காலா’ படத்தில் ரஜினிக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்ததை வாழ்நாளில் மறக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள இவர், கமல், கார்த்தி, சிம்பு எனப் பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
“லியோ’ படத்தில் என் நடிப்பைப் பார்த்து இயக்குநர்கள் ரஞ்சித், லிங்குசாமி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் பாராட்டினர். ‘சாக்லேட் காபி’ வசனத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அடைய செய்தது.
“விஜய் உடன் நடித்த அனுபவம் அருமையானது. நாம் தயங்கினாலும், நம்மை உற்சாகப்படுத்தி நன்றாக நடிக்க வைப்பார். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தாலும், நடனம் அமைப்பதை விடமாட்டேன்,” என்று சாண்டி மேலும் தெரிவித்துள்ளார்.