‘கரகாட்டக்காரன்’ பட நடிகை கனகாவின் புகைப்படத்தைப் பார்த்தால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார்.
பல ஆண்டுகளாக வெளியுலகப் புழக்கமின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த கனகாவை நடிகை குட்டி பத்மினி நேரில் சந்தித்துப் பேசி, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை கனகாவின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், “ஆரம்பக் காலத்தில் ஈர்க்குச்சி போல் ஒல்லியாக இருந்த கனகாவா இப்போது இப்படிக் காட்சியளிப்பது?” என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள்தான் கனகா. பாடகியாக வேண்டும் என்கிற கனவுடன் திரையுலகில் நுழைந்த இவரை, இளமையும் அழகும் திரைப்பட நடிகையாக மாற்றியது.
நடிகர் ராமராஜனின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர், கடைசியாக 2000ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்னர் நடிப்பதில் இருந்து விலகிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
திரையுலகில் இருந்து முழுமையாக விலகியதற்கு காதல் தோல்வி, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டன. அதேபோல் தனது தந்தையுடன் சொத்து பிரச்சினையும் கனகாவுக்கு இருந்ததால், பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இன்றி பாழடைந்தது போல் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு என உதவியாளர் ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் தனக்கான வேலைகள் அனைத்தையும் அவரே செய்து கொள்வதாகவும் கூறப்பட்டது.
அக்கம் பக்கத்தினரால் கூட எப்போதாவது தான் இவரை பார்க்க முடியுமாம். அதே போல் இவரைப் பார்க்க கடந்த பல ஆண்டுகளாகவே எந்த பிரபலங்களும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகை கனகாவை குட்டி பத்மினி அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.
நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் நடிகை கனகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, “பல ஆண்டுகளுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகா அம்மாவின் மகள், என் அன்புக்குரிய சகோதரி கனகாவை மீண்டும் சந்தித்தேன். இந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது,” என்று பதிவிட்டுள்ளார்.