‘பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது கருத்துக்கு திரைத்துறையில் இருந்து பரவலாக எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் ஞானவேல்ராஜா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பருத்திவீரன் பட சர்ச்சை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப் பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரைக் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.”
“சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்குப் பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவரைப் புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.”
“என்னை வாழவைக்கும் திரைத் துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என்று ஞானவேல் ராஜா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘பருத்திவீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இப்பிரச்சினை குறித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.
‘பருத்திவீரன்’ தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன் என்றார் இயக்குநர் அமீர்.
“ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே இது. ‘பருத்திவீரன்’ திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை,” என்றார் அமீர்.
இந்நிலையில், ஞானவேல்ராஜாவின் அறிக்கையை விமர்சித்து இயக்குனர் சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது” என்று சாடியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து ஞானவேலுக்கு இருப்பது பொருளாதார பிரச்சினை சார்ந்தது மட்டுமே. ஆனால் ஞானவேல் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்,” என்று கூறியுள்ளார்.
மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசித் தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், என்றும் கூறியுள்ளார்.
பணத்துக்காக தனது ‘படைப்புக்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும் என்று பொன்வண்ணன் அமீருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை தற்போது சமூக ஊடகத்திலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.