புறா பந்தயங்களைப் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது ‘பைரி’ திரைப்படம். துரைராஜ் தயாரிக்கும் இப்படத்தை ஜான் கிளாடி இயக்கியுள்ளார்.
‘பைரி’ என்பது ‘ஃபால்கன்’ என்ற பருந்தின் பெயராம். கதைக்களத்திற்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருந்ததால் அதைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் ஜான்.
வட சென்னை பகுதியில் இன்றளவும் புறா பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. அதைப் பின்னணியாகக் கொண்டு சில படங்கள் உருவாகி உள்ளன. தனுஷ் நடித்த ‘மாரி’ படமும் புறா பந்தயப் பின்னணியில் உருவான படம்தான்.
“ஒருவர் 30 புறாக்களை வளர்த்தால் மூன்று புறாக்கள் மட்டுமே பந்தயங்களில் போட்டியிடத் தேறும். அவ்வாறு வளர்க்கப்படும் புறாக்களை ‘பைரி’ பருந்து கொத்திச் சென்றுவிடும்.
“அதேபோல் மனிதர்கள் வாழ்க்கையிலும் உயரத்தில் இருப்பவர்களைக் கடந்து சில பேரால் மட்டுமே சாதிக்கமுடிகிறது. இதை மையமாக வைத்துத் தான் கதை சொல்லியிருக்கிறேன்,” என்கிறார் இயக்குநர் ஜான்.
புறா பந்தயம் குறித்து மட்டுமன்றி ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தைப் பற்றியும் அலசும் இப்படம், பிப்ரவரியில் திரைகாண உள்ளது.