சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘யாவரும் வல்லவரே’.
ரமேஷ் திலக், யோகிபாபு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுமே ஏதேனும் ஒரு வகையில் வல்லமை கொண்டவை என்பதை எடுத்துச் சொல்லும் கதையைக் கையாண்டுள்ளதாகச் சொல்கிறார் ராஜேந்திர சக்கரவர்த்தி.
“வாழ்க்கையில் போராட்டம், பிரச்சினை, நெருக்கடி என்று வரும்போது தங்களைக் காப்பாற்ற ஒரு ‘சூப்பர் ஹீரோ’ வர மாட்டாரா என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தூக்கணாங் குருவி யாருடைய தயவும் இல்லாமல் அனைவரும் வியக்கும் வகையில் தனக்கான கூட்டை கட்டுகிறது. யார் உதவியையும் அது எதிர்பார்ப்பது இல்லை
“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. அதை நாம்தான் கண்டு பிடிக்க வேண்டும். அவரவர் பசிக்கு அவரவர் தான் சாப்பிட வேண்டும். பிள்ளைக்கு உணவை ஊட்டிவிடும் வேலையைத்தான் பெற்ற தாயால் செய்ய முடியும். உணவை விழுங்க வேண்டியது அந்த குழந்தையின் வேலை.
“இந்தச் சமூகம் பிறரைச் சார்ந்து வாழப் பழகிவிட்டது. ஆனால் யாரையும் சார்ந்து இருக்காமல் சொந்தக்காலில் நிற்க முடியும் என்பதை நான்கு வெவ்வேறு கதைக் களங்களின் மூலம் கூறியுள்ளேன்,” என்கிறார் ராஜேந்திர சக்கரவர்த்தி.
ஒரு கைதி, கொலைக் கும்பல், காதலனுடன் வாழ நினைக்கும் காதலி, ராணுவ வீரன் ஆகியோரை மையப்படுத்தி நான்கு கதைக் களங்களை விவரித்துள்ளாராம்.
“ஒருவருக்கொருவர் எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில் அவர்கள் எப்படி ஒரே புள்ளியில் இணைகிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றுள்ளாராம்.
இப்படத்தின் கதாநாயகி அருந்ததி நாயர் தனக்கான கதாபாத்திரத்துடன் நூறு விழுக்காடு பொருந்தி கச்சிதமாக நடித்துள்ளதாக பாராட்டுகிறார் இயக்குநர்.
“அருந்ததியைப் பொறுத்தவரை தனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை முன்பே தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார். அதனால் படப்பிடிப்பின்போது அவர் தரப்பில் இருந்து எந்தவித குழப்பமும் சிக்கலும் ஏற்படாது. ஒரு காட்சிக்கு என்ன தேவையோ அதை தனது நடிப்பின் மூலம் துல்லியமாக வெளிப்படுத்துவார்.
“தனது கதாபாத்திரத்துடன் அருந்ததி ஒன்றிப்போவது தனி அழகே. சில காட்சிகளில் அவரது நடிப்பைக் கண்டு மொத்த படக்குழுவும் அசந்து போகும். ஓரிரு தருணங்களில் அவர் நடித்ததை நானும்கூட மெய்மறந்து ரசித்திருக்கிறேன். அதனால் காட்சியைப் படமாக்கும்போது ‘கட்’ என்று சொல்ல மறந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு காட்சியுடன் ஒன்றிப் போய்விடுவார்.
“மற்றொரு நாயகியாக ரித்விகா நடித்துள்ளார். ரேவதி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய பின்னர் என் மனதில் முதலில் தோன்றியது ரித்விகாவின் முகம்தான். இயக்குநரின் எதிர்பார்ப்புக்கும் அதற்கப்பாற்பட்ட வகையிலும் நடிக்கக் கூடியவர்.
“ஒவ்வொரு காட்சிக்கும் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துவார். அவர் வெளிப்படுத்தும் இத்தகைய உணர்வுகள் அற்புதமானதாக இருக்கும். ஒரு இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கை குறைவுதான்.
“எனவே ’இயக்குநரின் நடிகை’ என்று சொல்வதற்கு முழுத்தகுதி பெற்றவர் ரித்விகா” என்று பாராட்டுகிறார் ராஜேந்திர சக்கரவர்த்தி.
இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
தாம் விவரித்த கதையை பொறுமையாக கேட்டதுடன் அவ்வப்போது ஆர்வ மிகுதியால் தாம் எதைப் பேசினாலும் பொறுத்துக்கொண்டு நல்ல இசையை வழங்கியுள்ளதாக ரகுநந்தனுக்கும் பாராட்டு கிடைக்கிறது. இலங்கை எழுத்தாளர் தீபக் செல்வன், பொன் முத்துவேல் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
“கதைநாயகன் சமுத்திரக்கனியைப் பொறுத்தவரை ஒவ்வொரு காட்சியிலும் தனது முகபாவங்களால் அசத்தியிருப்பார். அவருக்கான வசனப்பகுதிகள் மிகவும் குறைவுதான். அழுத்தமான காட்சியிலும் கூட மௌனத்தின் மூலமாக கதாபாத்திரத்தின் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் மொத்த படக் குழுவினரையும் அசர வைத்தது.
“பெரிய இயக்குநர் என்றாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் அவர் அளித்த ஒத்துழைப்பு நான் எதிர்பாராதது. சமுத்திரக்கனி அண்ணன் சிறந்த இயக்குநர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஒரு நடிகர் என்று வரும்போது படப்பிடிப்பு தளத்தில் அவரை கதாபாத்திரமாகத்தான் பார்க்க முடியும்.
“சில சமயங்களில் நான் தயங்கி நிற்கும்போது அண்ணன் அதை புரிந்து கொண்டு தாமே முன் வந்து பேசுவார். ‘இங்கு நீ இயக்குநர், நான் ஒரு நடிகன். எனவே என்னிடம் வேலை வாங்குவதற்கு தயங்க வேண்டாம்’ என்று கூறி பலமுறை என்னை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தை உருவாக்க மெனக்கெட்டுள்ளேன். ஏறக்குறைய 13 ஆண்டுகால முயற்சியில் உருவாகியுள்ள இந்தப்படம் அனைவரையும் கவரும் என நம்புகிறேன்” என்கிறார் இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி.