கதாநாயகனாக உயர்வு கண்ட பின்னர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர் சூரி.
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து முடித்திருப்பவர், மேலும் சில படங்களில் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார்.
அந்த வகையில் இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி கதை நாயகனாக உருவாகியுள்ள ‘கருடன்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
இந்தப் படம் உருவானது குறித்து விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார்.
‘விடுதலை’ படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் சூரியின் மேலாளர் குமார் இவரை அணுகியுள்ளார். சூரியை வைத்துத் தாம் ஒரு படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் அப்படத்தை இயக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார்.
அச்சமயம், “இயக்குநர் வெற்றிமாறன் தாம் சில காலத்திற்கு முன்பு சந்தித்த ஒருவரைப் பற்றி என்னிடம் சுவாரசியமாக விவரித்தார். அதைக்கேட்ட போது வெற்றிமாறன் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் சூரி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
“இது குறித்து குமார், சூரியிடம் ஆலோசித்தபோது இருவருக்குமே மிகவும் பிடித்துப்போனது. இப்படித்தான் ‘கருடன்’ படம் தொடங்கியது,” என்கிறார் துரை செந்தில்குமார்.’
ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் மீது எந்த அளவுக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கும், அதன் எல்லை என்ன என்பதை இப்படம் அலசுமாம். இது நாயகனை முன்னிலைப்படுத்தும் கதையல்ல என்றும் படத்தில் இடம் பெறும் சில கதாபாத்திரங்களின் பார்வையில் கதை நகரும் என்றும் கூறுகிறார்.
“படம் தொடங்கிய பிறகு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். எனவே அந்த கதாபாத்திரம்தான் கதாநாயகன் என்று ரசிகர்களுக்கு எண்ணத் தோன்றும்.
“தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலைப் பின்புலமாக வைத்து கதை சொல்லி இருக்கிறேன். நமது செயல்களின் பலனாக, நன்மை, தீமைகளுக்கு ஏற்ப, நமக்குரிய கர்மா ஒரு கருடனைப்போல் நம் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் என்று கூறுவர். என்றேனும் ஒரு நாள் அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதையும் கதையினூடே சொல்லியிருக்கிறோம்.
“கருடன் என்பது இந்த கதைக்குப் பொருத்தமானதாக இருந்ததால் அதைத் தேர்வு செய்தோம்,” என்கிறார் இயக்குநர் செந்தில் குமார்.
படத்தில் வெள்ளந்தியான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம் சூரி. எது சரி, எது தவறு என்று சீர்தூக்கிப் பார்க்கும் பக்குவம் இல்லாத ஒரு சாமானியனின் பார்வையில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் பொது நியாயம் என்பது வேறு ஒன்றாக இருக்கும்.
“இரண்டுக்கும் இடையில் நாயகன் என்ன செய்கிறார் என்பதுதான் ஒட்டுமொத்த படம். இதில் சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார் சூரி.
“விடுதலை’ படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தில் நடித்தபோது, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று சூரிக்கு விரிவாக பாடம் நடத்தியுள்ளார் அண்ணன் வெற்றிமாறன். அதனால் சூரியை வைத்துப் படம் இயக்குவது எளிதான பணியாகி விடும். இந்த படத்தில் தாம்தான் கதாநாயகன் என்பது எந்த இடத்திலும் தெரிந்து விடக்கூடாது, கதைதான் கதாநாயகனாக முன்னிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
“ஒரு இயக்குநருக்கான தெளிவையும், புரிதலையும் அவரிடம் காண முடிகிறது என்கிறார் துரை செந்தில் குமார்.
இந்தப் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.