முழுநேர நடிகராவதில் தமக்கு விருப்பமில்லை என்றும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகனாக மாற வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.
இவரது இயக்கத்தில் வருண் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜோஸ்வா - இமைபோல் காக்க’.
இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
“கதாநாயகியைப் பாதுகாக்கும் உயர்தர மெய்க்காப்பாளர் வேடத்தில் வருண் நடித்துள்ளார். டிடி, கதிர், கிருஷ்ணா ஆகிய மூவரும் எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
“சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகர் ஆனேன். நல்ல பாத்திரங்களில் நடிக்கக் கேட்டு, நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இப்போது எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.
“கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது நடிகனாக என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது இயக்குநருக்கான வேலையே சரியாக இருக்கிறது. அதில்தான் முழுக் கவனத்தையும் செலுத்துகிறேன்,” என்றார் கௌதம்.
“ஜோஸ்வா’ படத்தில் நாயகனாக நடித்துள்ள வருணுடன் நான் இணைந்து நடித்ததில்லை. முதலில் காதல் கதையைத்தான் தேர்வு செய்தோம். ஆனால் ஆக்ஷன் நாயகனாக வருண் சிறப்பாக நடிப்பார் என நம்பினேன்.
“பாரீஸ் நகருக்குச் சென்று மூன்று மாதங்களுக்குப் பயிற்சி மேற்கொண்டார். வருண் நான் என்ன கேட்டாலும் கொடுப்பார். காலணிகூட அணியாமல் சண்டைக் காட்சிகளில் மிரட்டி உள்ளார்,” என்கிறார் கௌதம் மேனன்.