“நகைச்சுவைதானே... எளிதாக நடித்துவிடலாம் என்று யாராவது சொன்னால் கொந்தளித்துவிடுவேன்,” என்கிறார் இயக்குநர் எழில்.
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவைப் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர்களில் இவரும் ஒருவர்.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது உண்மையாகவே மிகச் சிரமமான பணி என்றும் தற்போது தாம் இயக்கி வரும் ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படம் ஒரு முழுநீள நகைச்சுவைப் படைப்பாக உருவாகி உள்ளது என்றும் விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் எழில்.
“மக்கள் கவலைகளை மறக்க வேண்டும் என்பதை மனதிற்கொண்டு ஒரு படம் எடுத்திருக்கிறோம். மகிழ்ச்சியாக குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம்.
“தேவையற்ற வன்முறை, மோதல் என எதுவும் இருக்காது. அனைத்தையும் உற்சாகத்துடனும் புன்னகையுடனும் காட்சிப்படுத்த விரும்புவேன்,” என்று சொல்லும் எழில், ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ என காதல் கதைகளில் தொடங்கி இப்போது நகைச்சுவைத் திசையில் சென்று கொண்டிருக்கிறார்.
‘தேசிங்கு ராஜா’ முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமல்தான் இரண்டாம் பாகத்திலும் நாயகனாம்.
“நகைச்சுவை என்று வந்துவிட்டால் விமல் அருமையாக நடிப்பார். அந்த அலைவரிசைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வார். அவரை நம்பி எத்தகைய நகைச்சுவைக் கதாபாத்திரத்தையும் ஒப்படைக்கலாம்.
“பூஜிதா, ஹர்ஷிதா என இரண்டு நாயகிகள் உள்ளனர். மேலும், சாமிநாதன், சிங்கம் புலி, புகழ், சாம்ஸ், வையாபுரி, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், மதுரை முத்து, மதுமிதான்னு பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளோம்.
“நான் அழைத்ததும் அனைவருமே நம்பிக்கையோடு வந்து இணைந்தனர். ஜனா என்ற நல்ல புதுமுகம் கிடைத்திருக்கிறார்.
“முதல் பாகத்தில் பண்ணையாராக வந்து அடாவடி செய்த ரவி மரியா, இதில் அரசியல் வாதியாக வருகிறார்.
“‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்குப் பிறகு, நானும் இசையமைப்பாளர் வித்யாசாகரும் இதில் இணைந்துள்ளோம். முன்பு இசை குறித்து எனக்கு அதிகம் தெரியாது. இப்போது ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன்.
“ஒரே பகுதியில் இரண்டு காவல் நிலையங்கள் இருப்பதால் சில பிரச்சினைகள் எழுகின்றன. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளை மற்றொரு காவல் நிலையத்துக்கு அனுப்பிவிட்டு ஜாலியாகப் பொழுதைக் கழிப்பது கதாநாயகன் பணியில் இருக்கும் காவல் நிலையத்தின் வழக்கம்.
“இந்நிலையில், மூன்று நண்பர்கள் சின்ன பிரச்சினை காரணமாக பிரிந்துவிடுகிறார்கள்.
“காவல்துறை பின்னணியில் இந்த நண்பர்கள் மீண்டும் நேர் கோட்டில் இணையும்போது என்ன ஆகிறது என்பதுதான் கதை,” என்கிறார் இயக்குநர் எழில்.
‘தேசிங்கு ராஜா 2’ படத்தில் ஒரு காட்சி.
படம்: ஊடகம்